மதுரையே மாறப்போகுது.. வண்டியூர் பூங்காவில் முதல்முறையாக மிதவை நடைபாதை.. எப்போது திறப்பு?
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயில் கொடைக்கானல், கோவையை போல் முதல்முறையாக நவீன தொழில்நுட்பத்தில் மிதவை நடைபாதையுடன் கூடிய படகு குழாம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பூங்காவின் 70 சதவிகித பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஜூலை மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து திறக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் மதுரையில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு மைதானம், கோரிப்பாளையம் மேம்பாலம், டைடல் பார்க் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியது. இதில் ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோரிப்பாளையம் மேம்பாலம் மற்றும் டைடல் பார்க் பணிகள் நடந்து வருகின்றன.

மதுரை சுற்றுலா
இருந்தாலும் மதுரை மக்களுக்கு பொழுதுபோக்கிற்கான இடங்களாக கோவில்கள் மட்டுமே இருந்து வருகிறது. சென்னையை போல் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பெரிய மால்களோ அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்களோ இல்லை. இதனால் கோவில்களில் தான் மக்கள் பெரியளவில் கூடி வருகின்றனர்.
வண்டியூர் கண்மாய் பணிகள்
இந்த நிலையில் மதுரை வண்டியூர் கண்மாயை சுற்றுலாப் பயணிகள் முதல் உள்ளூர் மக்களுக்கான பொழுதுபோக்கு தலமாக மாற்றும் நோக்கில், ரூ.50 கோடியில் சுற்றுலாத்தலமாக்கும் பணிகள் தொடங்கின. ஏற்கனவே அங்கு சிறிய பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
என்னென்ன அமைகிறது?
இதனை புதுப்பித்து சுற்றுலாத்தலமாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. அந்த வகையில் கண்மாயில் படகு சவாரி, சைக்கிளிங் பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை, யோகா மையம், தியான மையம், சிறிய நூலகம், சிற்றுண்டி, குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், பூங்கா ஆகியவை அமைகிறது.
மிதவை நடைபாதை
இதனை விடவும் மதுரை மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பமான பிளோட்டிங் செட்டி அமைப்பில் படகு குழாமிற்கு செல்ல மிதக்கும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுபோன்ற மிதவை நடைபாதை கொடைக்கானல் மற்றும் கோவையில் ஏற்கனவே உள்ளது. முதலில் படகு குழாம் செல்ல சிமெண்ட் கட்டுமானத்தில் கண்மாயில் நடைபாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
எப்போது திறப்பு?
ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறையும் என்பதால், திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பின் படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக பூங்கா பணிகள் 70 சதவிகிதம் வரை நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் வண்டியூர் கண்மாய் பூங்கா திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications