மதுரையில் கம்மியான ஊதியம் வாங்குற கிராம உதவியாளருக்கு ரூ.67 கோடி சொத்துகள்.. தலை சுத்துதே தலையாரி
மதுரை: அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் பணியாற்றும் சிலர், தங்களை நாடி வரும் விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் வாங்குவது என்பது தீரா குற்றச்சாட்டாக உள்ளது.. இப்போது கிராம உதவியாளர் ஒருவரின் வருமானத்தை மீறிய சொத்து விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையாரிடம் எப்படி இவ்வளவு சொத்துக்கள்? என்று மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன நடந்தது?
மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் பாண்டி.. 58 வயதாகிறது.. இவர் தலையாரி அதாவது கிராம உதவியாளராக பணியாற்றி உள்ளார்..

இவர் தன்னுடைய பணியின்போது ஏகப்பட்ட சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதனடிப்படையில்தான் பாண்டியிடம் விசாரணையும் சோதனையும் ஆரம்பமானது..
அப்போது கிட்டத்தட்ட ரூ.67.25 கோடியையும் தாண்டி சொத்துக்களை இவர் சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.. இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
தலையாரி - மதுரை கிராம உதவியாளர்
அதாவது திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளம் பகுதியில் 2018 முதல் 2023 மார்ச் வரை பாண்டி கிராம உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.. அப்போது சாதாரணமாக கிடைக்கும் மாத சம்பளத்திற்கு மேலாக, தன்னுடைய பெயரிலும், மனைவி ராணி பெயரிலும், 2 மகன்களின் பெயரிலும் பல நிலங்கள் மற்றும் சொத்துகள் சேர்த்திருப்பது போலீசார் சேகரித்த ஆவணங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால், அவரின் வருமானத்தை விட மிக அதிகமான அளவில் சொத்து சேர்த்துள்ளார் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதில் சில சிக்கல்கள் கிளம்பி உள்ளன
ரூ.67 கோடியே 25 லட்சத்து 634 ரூபாய்
காரணம், பாண்டியின் குடும்பத்திலும் கடந்த சில வருடங்களில் பல துக்ககரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அவரது மூத்த மகன் பிரபாகர் தனியார் வங்கி ஊழியர் ஆவார்.. அவரின் மனைவி மாளவிகா... திடீரென பிரபாகர் உடல்நலக்குறைவால் இறந்தபிறகு, குடும்ப சொத்துக்கள் வேறு கைக்கும் போகாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மாளவிகாவை 2வது மகன் பிரகாஷூற்கு திருமணம் செய்து வைத்துவிட்டாராம் பாண்டி.
அப்போதும் பாண்டி குடும்பத்துக்கு நிம்மதி இல்லை.. சில காலத்துக்கு பிறகு குடும்ப பிரச்சனையால் மாளவிகா தற்கொலை செய்து கொண்டாராம்.. இதற்கு பிறகு பிரகாஷூமும் கடந்த வருடம் ஜூன் 23ம் தேதி இறந்துவிட்டார்.. இப்படி தன்னுடைய 2 மகன்களும் இறந்த நிலையிலும், அவர்களின் பெயரிலும் சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போது, பாண்டியின் மொத்த சொத்து ரூ.67 கோடியே 25 லட்சத்து 634 ரூபாய் மதிப்பில் இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.. இதுகுறித்து பாண்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மாமியார், மனைவி சொத்துக்கள்
அப்போது, "இதில் பெரும்பாலான சொத்துகள் மனைவி தரப்பிலிருந்து கிடைத்தவை.. மாளவிகாவை இளைய மகனுக்கு திருமணம் செய்து வைத்தது சொத்துக்கள் குடும்பத்திலே நிலைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான்" என்று பாண்டி விளக்கம் தந்துள்ளார்..
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து ஆவணங்கள், வங்கி விவரங்கள் மற்றும் சொத்து பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பாண்டியின் விளக்கங்களும், சொத்து வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்பதை ஆராய்ந்து வருவதுடன், தேவையானவர்கள் மேலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தெரிகிறது.
2வது மகனுக்கு மருமகளுடன் திருமணம்
போலீசார் இதுகுறித்து தெரிவித்ததாவது: "பாண்டி தரப்பில், பெரும்பாலான சொத்துக்கள் மனைவி ராணி சகோதரர்கள், மாமியார் மூலம் வந்ததாக சொல்கிறார்.. தன்னுடைய சொத்துக்கள் கைமாறிப் போகாமல் இருக்கவே மாளவிகாவை 2வது மகனுக்கு மருமகளை திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த சொத்துக்கள் எவ்வாறு கையகப்படுத்தப்பட்டன? அதன் உண்மையான ஆதாரம் என்ன? குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள் யார் யார்? என்பது குறித்து ஆவணங்கள் அடிப்படையில் ஆழமான விசாரணை தொடர்கிறது" என்கிறார்கள்.
ஆனாலும், ஒரு சாதாரண கிராம உதவியாளரின் மாத சம்பளமே சொற்பமாக இருக்கும்போது, இந்தளவுக்கு பாண்டிக்கு சொத்து எப்படி வந்தது? என்று மதுரை மக்கள் வியப்பில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications