மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா
மதுரை: மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த சூழலில், அந்த தொகுதியில் மீண்டும் திமுக சிட்டிங் எம்எல்ஏ தளபதி களம் காண இருக்கிறார். இதனால் மாணிக்கம் தாகூர் முன் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு முன்பு வரை, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக எழுப்பி வந்தார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை மதுரை வடக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ தளபதியை சீண்டி வந்தார்.

மாணிக்கம் தாகூரின் பேச்சுகள் மற்றும் பதிவுகள் திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் மதுரை வடக்கு தொகுதியில் போஸ்டர்களும் ஒட்டி கை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று அனலை கிளப்பினர். இந்த நிலையில் திமுக தரப்பில் மதுரையில் 2 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேலூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் மாணிக்கம் தாகூர் கோரிய மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ தளபதிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விருதுநகர் தொகுதி தேமுதிக வசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் ஒரு தொகுதியை விஜயபிரபாகரனுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப விருதுநகர் சட்டசபைத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. விருதுநகர் எம்பியாக மாணிக்கம் தாகூர் இருக்கும் நிலையில், எம்பி தேர்தலில் மாணிக்கம் தாகூரை எதிர்த்து தான் விஜய பிரபாகரன் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இப்போது விஜய பிரபாகரனுக்காக மாணிக்கம் தாகூர் வாக்கு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications