அழகர்சாமி நாயுடு பேரன் என்பதால் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு! ஜாதி அரசியலை கையிலெடுத்த மாணிக்கம் தாகூர்
மதுரை: காங்கிரஸ் கட்சியின் அழகர்சாமி நாயுடுவின் பேரன் என்பதால் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு அளிக்கிறோம் என மாணிக்கம் தாகூர், ஜாதியை குறிப்பிடும் வகையில் பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 6 பேர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தேமுதிக அதே சமூகம் என்பதால் தன் சமூகத்தினருக்கு வாய்ப்பு கொடுத்ததாக பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். இவர் அண்மையில் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோரினார்.
அவர்களும் கூட்டணி கட்சி என்ற முறையில் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். அது போல் அண்மையில் முதல்வர் ஸ்டாலினும் விஜயகாந்த் குறித்த நினைவலைகளை பகிர்ந்து விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் அண்மையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூரை விஜய பிரபாகரன் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது நூலிழையில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்தார். ஒரு சில ரவுண்டுகள் வரை விஜய பிரபாகரனே வெல்வார் என நினைத்திருந்த நிலையில் திடீரென கள நிலவரம் மாறியது.
இதுகுறித்து பிரேமலதாவும் விஜய பிரபாகரனும், மாணிக்கம் தாகூர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். ஒரு சுற்று எண்ணும் போது ஏதோ நடந்துள்ளது என சந்தேகத்தை கிளப்பியிருந்தனர்.
இதற்கு மாணிக்கம் தாகூரும், சந்தேகம் என இருந்தால் விஜய பிரபாகரன் தேர்தல் அன்றே கேட்டிருக்கலாமே, அது என்ன தேர்தல் முடிந்து சாவகாசமாக சென்னைக்கு போய் பேசுவது என விமர்சித்திருந்தார். பின்னர் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் அழகர்சாமி நாயுடுவின் பேரன் என்பதால் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு அளித்துள்ளேன் என ஜாதியை குறிப்பிட்டு அவர் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். அவரது தந்தைதான் மாணிக்கம் தாகூர் சொல்லும் அழகர்சாமி! பொதுவாக கடந்த காலங்களில் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் கூட்டணி என வந்துவிட்டால் அவர்களை ஆதரிப்பதுதான் கூட்டணி தர்மம்.
ஆனால் அதை மறந்த மாணிக்கம் தாகூர், ஜாதியின் பெயரை பயன்படுத்தி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியாகிவிட்டது தேமுதிக, அதனால் அவர்களுக்கு கட்சி தலைமை ஆதரவு அளிப்பதை போல் நாங்களும் ஆதரவு என மாணிக்கம் தாகூர் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஜாதியை கையில் எடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக மாணிக்கம் தாகூர், கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரது பேச்சால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையாமல் போயிருக்கக் கூடும். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலையிட்டு கூட்டணியை உறுதி செய்தார்.











Click it and Unblock the Notifications