ஒலித்த தாரை, தப்பட்டை இசை.. "மார்கழி மாதத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது" என்கிறார் பா.ரஞ்சித்
மதுரை: மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும், மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண் சார்ந்தது தான் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
Recommended Video
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது எனவும், இந்த ஆண்டு இன்று மதுரையிலும் , நாளை கோவையில் நடத்துகிறோம், மேலும் வரும் 24முதல் 31ஆம் தேதி வரை 7நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது எனவும், நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

மக்களுக்கான இசை
மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டுசெல்கிறோம் எனவும், மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான் எனக் கூறிய ரஞ்சித், நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விசயங்களை இசை வடிவமாக கொண்டுவருவது தான் , இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது என்றார். மேலும், சினிமா இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக்கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி என தெரிவித்தார்.

அரசின் ஆதரவு வேண்டும்
நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்கு கொண்டுசெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு என்றும், இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில் மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனக் கூறிய பா.ரஞ்சித், தென் தமிழக ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளதாகவும், நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

கலை பரிணாமம் அடையும்
மக்களிடம் கலையை ஜனநாயகபடுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம் எனக்கூறிய அவர். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும் என கோரிக்கை வைத்தார்.

நாட்டுப்புற கல்லூரிகள் வேண்டும்
சமூகவலைதளங்களின் மூலமாக உருவாகும் வரவேற்பு காரனமாக கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது எனக்கூறிய இயக்குனர் பா.ரஞ்சித், நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications