நான் பேச நினைத்தது அவனுக்கு எப்படி தெரியும்? மகன் துரையை நினைத்து மாநாட்டில் பெருமைப்பட்ட வைகோ!
மதுரை: நான் பேச நினைத்ததெல்லாம் எனது மகனுக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை என்ற வைகோ பதவிக்காகவோ, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவோ தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வரவில்லை என மதுரை மாநாட்டில் பேசியிருக்கிறார்.
மேலும், நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் காமராஜர் தனது கலிங்கப்பட்டி இல்லத்துக்கு மதிய உணவு சாப்பிட வந்திருக்கிறார் எனவும் பழைய பிளாஷ்பேக் நிகழ்வை மதிமுக மாநாட்டில் பேசினார் வைகோ.

காமராஜர் தனது இல்லத்தில் ஓய்வெடுத்த போது தாம் அவருடன் ஒரு போட்டோ எடுக்க ஆசைப்பட்டதாகவும் இந்த தகவலை அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் காமராஜரிடம் சொல்லிய போது, கழற்றிய சட்டையை தனக்காக மீண்டும் அணிந்து தன்னை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னார் என்று தெரிவித்தார்.
பழைய பிளாஷ்பேக்கில் பேச்சை ஆரம்பித்து அப்படியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு விவகாரத்திற்குள் சென்றார் வைகோ. டெல்லியிலிருந்து அட்டர்னி ஜெனரல் தன்னை பார்ப்பதற்காக மதிமுக தலைமையகத்துக்கு வந்ததாகவும் வந்த அவர் ஸ்டெர்லைட் பற்றி உங்களுக்கு யாரோ தவறான தகவல்களை கூறியிருக்கிறார்கள் என்றதும் வெளியே எழுந்து போகுமாறு தாம் கூறிவிட்டதை நினைவுகூர்ந்தார்.
அநேகமாக இந்தியாவிலேயே அட்டர்னி ஜெனரலை வெளியே எழுந்துச் செல்லுமாறு கூறிய நபர் நானாக தான் இருப்பேன் என மதிமுக மதுரை மாநாட்டில் குறிப்பிட்டார் வைகோ. நாட்டுக்காக, ஈழத்தமிழர்களுக்காக, தமிழக உரிமைகளுக்காக தன்னுடைய குடும்பம் பெரியளவில் தியாகம் செய்திருப்பதாக வைகோ பேசினார்.
இதனிடையே நான் பேச நினைத்ததெல்லாம் எனது மகனுக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை என்றவர், பதவிக்காகவோ, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவோ தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வரவில்லை என்பதை கடைசியாக பேசிவிட்டுச் சென்றார். இதன் மூலம் தன்னை போலவே தனது மகனும் பதவிகளை துறப்பார் என்பதை மாநாட்டு பிரகடனமாக அறிவித்துவிட்டு சென்றுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications