15 வருடங்களுக்கு பின் அதிசயம்! காங்கிரஸின் ‘சர்ப்ரைஸ்’ சாய்ஸ் விஸ்வநாதன்! கக்கன் கால சென்டிமென்ட்
மதுரை: வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு முடிந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழக அரசியலும் உற்று நோக்கிய மேலூர் தொகுதி பஞ்சாயத்துக்கு ஒருவழியாக 'எண்ட் கார்டு' போட்டிருக்கிறது காங்கிரஸ் தலைமை. கோஷ்டி பூசலில் சிக்கித் தவித்த மேலூர் தொகுதியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் எம்.பி விஸ்வநாதனை வேட்பாளராகக் களமிறக்கி அதிரடி காட்டியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

கோஷ்டி பூசல்... இழுபறி... திடீர் திருப்பம்!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், 27 இடங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஆனால், மேலூர் தொகுதியை மட்டும் டெல்லி மேலிடம் 'ஹோல்ட்' செய்து வைத்திருந்தது. காரணம், அந்தத் தொகுதியைக் கைப்பற்ற தமிழக காங்கிரஸ் புள்ளிகளிடையே நிலவிய கடும் போட்டிதான்.
சனி இரவு வரை சீட் யாருக்கு என்பதில் ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், "வேண்டுமானால் தொகுதியை மாற்றிக்கொள்ளலாமா?" என்று திமுக கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்தன.
பாண்டிச்சேரி சந்திப்பு டூ மேலூர் சீட்!
இந்த இக்கட்டான சூழலில்தான், ஞாயிறு காலை புதுச்சேரியில் முகாமிட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்துப் பேசினார் முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி விஸ்வநாதன். அந்தச் சந்திப்பு முடிந்த சில மணிநேரங்களிலேயே விஸ்வநாதனின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏன் விஸ்வநாதன்?
நாடாளுமன்ற செயல்பாடு: 2009-2014 காலகட்டத்தில் காஞ்சிபுரம் எம்.பி-யாக இருந்தபோது, 87 சதவீத வருகைப்பதிவு, 38 விவாதங்கள் மற்றும் 658 கேள்விகள் என நாடாளுமன்றத்தில் விஸ்வநாதன் காட்டிய 'பெர்பார்மன்ஸ்' டெல்லி மேலிடத்தை கவர்ந்திருக்கிறது.
கக்கன் சென்டிமென்ட் - காங்கிரஸ் எடுக்கும் முக்கிய முடிவு
1957-ல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கக்கன் அவர்கள், மேலூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வரலாற்றுப் பின்னணியையும், விஸ்வநாதனின் அனுபவத்தையும் கருத்தில் கொண்டே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தொகுதியில் ஒரு 'தனி' வேட்பாளர்!
தமிழக தேர்தல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 2011 தேர்தலில் மதுரவாயலில் பீம் ராவ் (சிபிஎம்) மற்றும் பல்லாவரத்தில் தன்சிங் (அதிமுக) ஆகியோர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே கடைசியாக இருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின், ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
திமுக-வின் நிம்மதிப் பெருமூச்சு!
மறுபுறம், வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம் திமுக தரப்பிற்குச் சற்று கலக்கத்தைக் கொடுத்திருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையிலேயே முகாமிட்டுப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்க, கனிமொழி எம்.பி பிரச்சாரத்தை முடித்திருந்த நிலையில், கூட்டணி வேட்பாளர் யார் என்று தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
தேர்தல் வேலைகள் தீவிரம்
இப்போது விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியினர் தேர்தல் வேலையில் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
மேலூர் மண்ணில் கக்கன் காலத்து வரலாற்றுப் பெருமையை விஸ்வநாதன் மீட்டு எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications