2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்.. மதுரையில் மோடி வாக்குறுதி!
மதுரை: 2024-க்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்று மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழில் பேசிய மோடி
இந்த நிலையில் இன்று மதுரையில் நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் ''வெற்றி வேல் வீரவேல் ''என்று தனது பேச்சை தொடங்கினார். ''நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று தமிழில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
புண்ணிய பூமியாகவும், வீர பூமியாகவும் மதுரை மண் விளங்குகிறது. இம்மானுவேல் சேகரன், வீர பாண்டிய கட்டபொம்மன், காமராஜரை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன். முத்துராலிங்க தேவருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன். பல்வேறு சமுதாய மக்கள் வாழும் மண் மதுரை. மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள். சிறப்பு வாய்ந்த தமிழ் கலாசாரத்தின் மையமாக மதுரை விளங்குகிறது.

எம்.ஜி.ஆருக்கும் மதுரைக்கும் தொடர்பு
எம்.ஜி.ஆருக்கும் மதுரைக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. மதுரை வீரன் என்னும் பெயரில் எம்.ஜி. ஆர் நடித்த படத்தை யாராலும் மறக்க முடியுமா? காங்கிரஸ் அரசு எம்ஜிஆர் அரசை கலைத்த பிறகு அவர் நேராக மதுரைக்கு தான் வந்தார். சவுராஷ்டிரா மக்களை மதுரை மக்கள் ஏற்றுக் கொண்டது ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு உதாரணம். மதுரை-கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதன் பிறகு தொழில்துறை மேம்படும்.

2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்
நாடு முழுவதும் மதுரை போன்ற முக்கிய நகரங்களை சாலை, ரயில், விமானம் ஆகிய போக்குவரத்தை கொண்டு மற்ற நகரங்களை நாங்கள் இணைக்கிறோம். நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதிகளை தொழில்ரீதியாக மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். நீர் வேளாண்மையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிவோம். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும்.

வைகை ஆற்றில் அனைத்து நாட்களும் தண்ணீர்
தமிழகத்தில் சுமார் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் மதுரையில் அனைத்து நாட்களுக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படும். ஜல் ஜீவன் திட்டம் மூலம் வைகை ஆற்றில் அனைத்து நாட்களும் தண்ணீர் ஓட செய்ய இயலும். அதிக தொழிற்சாலைகள் இங்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். கிராமத்திலும் அகண்ட அலைவரிசை சேவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்.விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வேளாண் உற்பத்தி பொருட்களை அதிகரிக்க செய்வோம். தென் தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் 7 ஜவுளி பூங்காக்கள்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால் அனைத்து திட்டங்களையும் மேம்படுத்துவோம்..தமிழக வாலிபர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 7 ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் வை பை சேவை விரைவில் தொடங்கப்படும். திமுகவும் காங்கிரசும் அடுத்தவர்கள் வேலையை பொய் செல்கிறார்கள். காங்கிரஸ்-திமுக பல வருடங்கள் ஆட்சியிலிருந்தபோதிலும் மதுரையில் எய்ம்ஸ் துவங்க நினைத்து பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் இந்த கனவை நிறைவேற்றியுள்ளோம். மதுரையில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மிக விரைவில் அமைக்கப்படும்.

பெண்களுக்கு அதிகாரம்
7 உட்புரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தேவேந்திர குல மக்களின் நலனை மீட்டெடுத்தது மத்திய அரசுதான். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டது. திமுக-காங்கிரசார் தமிழகத்தின் பாதுகாவலர்கள் போல் சித்தரித்து கொள்கின்றனர். அது உண்மை அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications