மோடி நிகழ்ச்சிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு.. விமானம் பறக்க தடை.. போக்குவரத்து மாற்றம்.. பரபரத்த மதுரை
Recommended Video

மதுரை: பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரூ.1264 கோடியில் மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு 750 படுக்கை வசதி, 100 எம்பிபிஎஸ் கல்வி இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த பிரமாண்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 11.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேர்கிறார்.

காரில் பயணம்
அங்கிருந்து கார் மூலமாக சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டேலா நகருக்கு வந்து கேம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

நெல்லை, தஞ்சை மருத்துவமனைகள்
இதே விழாவில் மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய நகரங்களில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மண்டல மாநாடு
இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி மண்டல மாநாடு இப்பகுதியின் அருகேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகல் 12.05 மணிக்கு இந்த மாநாடு தொடங்குகிறது. 10 லோக்சபா தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இதில் உரையாற்றும் நரேந்திர மோடி, 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று பிறகு கேரள மாநிலம் கொச்சி செல்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு
மோடி வருகையையொட்டி, மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் விழாவில் பங்கேற்கக் கூடிய சுமார் ஒன்றரை மணி நேரமும் விமானங்கள் அங்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications