பாஜக பொதுக்கூட்டத்தில், அதிமுகவினருக்கு வலைவீச்சு.. மோடி பேச்சில் இதை கவனித்தீர்களா?
Recommended Video
மதுரை: மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் அதிமுக வாக்குகளை அள்ளுவதற்கு தேவையான பேச்சுக்களை உதிர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா உட்பட பல்வேறு நலத்திட்டங்களை இன்று மதியம் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இதற்குப் பிறகு, அருகே அமைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
மதுரை பேச்சு
மோடி தனது உரையின் துவக்கத்தில், மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் பெருமை குறித்து பேசினார். இதன் பிறகு அவர் கூறிய ஒரு வார்த்தை மிகவும் முக்கியத்துவமானது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மதுரை மண்ணில் நின்று கொண்டு எனது அஞ்சலியை செலுத்துகிறேன், என்று மோடி தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி
வரும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துதான் களமிறங்கவுள்ளதாக ஏறத்தாழ உறுதியான தகவல்கள் உள்ளன.
இந்த நிலையில்தான் ஜெயலலிதாவை புகழ்ந்துரைத்துள்ளார் மோடி.
ஜெயலலிதாவிற்கு புகழாரம்
பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் சம்பந்தமின்றி, ஜெயலலிதா குறித்து மோடி பேசியிருக்க தேவை இல்லை. இருப்பினும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக மோடி குறிப்பிட்டார்.
அதிமுகவிற்கு அடிக்கல்
இதற்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக அரசை மறைமுகமாக பாராட்டி பேசியிருந்தார் மோடி. பாஜக பொதுக்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள கட்சிகளையும் விமர்சனம் செய்தார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மோடி அதிமுகவை பாஜகவிற்கு இழுக்க தேவையான அடிக்கல்லையும், சேர்த்தே நாட்டிவிட்டு சென்றுள்ளார் என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.