போதைப்பொருள் விவகாரம்.. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் அப்பாவிகள்.. சீனுக்குள் வந்த சீமான்!
மதுரை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுமைக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் இருப்பதாக கூறிய அவர், விற்பனை செய்தவர் அதிமுக பிரமுகர் என்பதால் அந்த பக்கம் திருப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்ரீகாந்த்-க்கு போதைப் பொருள் விற்பனை செய்தது அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர். இவருக்கு பிரதீப் குமார் என்பவர் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கொக்கைன் போதைப்பொருளை விற்பனை செய்துள்ளார்.

போதைப்பொருள் விவகாரம்
அதேபோல் நடிகர் கிருஷ்ணாவுக்கு கெவின் என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரிய வந்தது. கெவின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையில் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதில் பிரதீப் குமார் மற்றும் கெவின் ஆகியோர் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஜானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த சிலரும் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரைத்துறையில் போதை பழக்கம்
சினிமா மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களும் கூட போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் போதைப்பொருள் பயன்படுத்திய கும்பல், விற்பனை செய்த கும்பல், சென்னைக்கு கடத்தி வரும் கும்பல் என்று அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
சீமான் பேட்டி
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் தான் போதைப்பொருளை விற்பனை செய்தார்களா? இந்தியா முழுமைக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் இருக்கிறது. அதானி துறைமுகத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வந்தன.
2 நடிகர்களும் அப்பாவிகள்
போதைப்பொருளுக்கு பலரும் அடிமையாகி இருக்கிறார்கள். பயன்படுத்தியவரை கைது செய்துள்ளனர். விற்பனை செய்ததுது யார்? ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள். இந்த வழக்கில் அதிமுகக்காரர் விற்பனை செய்ததால், பிடித்திருக்கிறார்கள். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், உருவாக்குபவர்களை பிடிக்க வேண்டும். அந்த 2 பேரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?
சீமான் கோரிக்கை
பாடகி சுசித்ரா எவ்வளவு கொக்கைன் விருந்து பரிமாறப்படுகிறது என்று சொல்கிறார்கள். கோயில்கள், கல்லூரிகள் முன்னிலையில் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். குடிப்பதற்கு வண்டியில் செல்லலாம், ஆனால் குடித்த பின் வண்டியில் செல்லக் கூடாது.. அப்படியென்றால் ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி எங்களை வீட்டில் சென்று விட்டுவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications