பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஹைகோர்ட்டில் நிதித்துறை செயலர் சொன்ன பதில்!
மதுரை: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வழக்கில் புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக நிதித்துறை செயலர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமே பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது.
இதே நடைமுறையில் தமிழக அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியது. முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இதுதவிர்த்து பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டு வந்தது. இந்த பழைய ஓய்வூதியம் என்பது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய ஓய்வூதியம் என்பது பெரிய அளவில் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இல்லை என்று கருதப்படுகிறது. அதேபோல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அகவிலைப்படி உயர்வு இருக்காது. இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோரி ஆசிரியர் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா மற்றும் குமரப்பம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிதித்துறையின் கூடுதல் செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய ஓய்வூதியத் திட்டமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித தொய்வும் இல்லை.. உரிய சட்ட விதிமுறைகளின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 54 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
அதில் 50 ஆயிரம் பேருக்கு பணி ஓய்வு பணப் பலன்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் எந்தவித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல.. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications