மதுரை டூ சென்னை.. ஒரு டிக்கெட் விலை ரூ.6 ஆயிரம்.. ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை.. மக்கள் ஷாக்!
மதுரை: மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை ரூ.6 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசுப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்ய தவறியவர்கள், எப்படி மீண்டும் சென்னை திரும்புவது என்று புலம்பி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்த மக்கள், தற்போது பொங்கல் பண்டிகை நிறைவடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தமிழக அரசு போக்குவரத்து துறை ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

அதன்படி நேற்று மட்டும் சுமார் 5,567 பேருந்துகள் சென்னை மற்றும் ஏனைய நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் இன்றும் கடைசி நாள் விடுமுறை என்பதால், பயணிப்போரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் சென்னைக்கு மட்டும் சுமார் 3,100 பேருந்துகளும், மற்ற நகரங்களுக்கு 4,080 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று ஒருநாள் மட்டும் மொத்தமாக பயணிகளின் வசதிக்காக 7,180 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 12,747 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் அரசு பேருந்துகளில் அதிகளவில் முன் பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஸ்லீப்பர் மற்றும் புஷ் பேக் வசதிகள் கொண்ட பேருந்துகளில் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால் மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிப்போர் சாதாரண சீட்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு திரும்பும் சாமானிய மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது மதுரையில் இருந்து சென்னை திரும்பும் ஒரு ஆம்னி பேருந்தில் டிக்கெட் விலையாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில ஆம்னி பேருந்துகளில் ஒரு டிக்கெட் விலை ரூ.4,500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணிப்போருக்கான டிக்கெட் விலையாக ரூ.7 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் பலரும் தங்களின் பயணத் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications