தேவர் குருபூஜை முடிந்தது! துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வங்கி லாக்கரில் மீண்டும் தங்க கவசம்
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் குடும்பத்தினர் - நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தார்.
இந்த நிலையில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஓபிஎஸ் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, அந்த பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார். எனினும் அதிமுக பொதுக் குழு வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த முறை தேவர் ஜெயந்திக்காக ஓபிஎஸ்ஸும் திண்டுக்கல் சீனிவாசனும் தங்களிடம் தங்க கவசத்தை ஒப்படைக்குமாறு மனு தாக்கல் செய்தனர்.
இந்த குழப்பத்தால் யாரிடம் ஒப்படைப்பது என தெரியாமல் குழப்பம் இருந்தது. இதனால் வங்கி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 30 -ஆம் தேதி தேவர் குருபூஜை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு, அதிமுக பொதுக் குழு செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகாரமும் இருந்தது.
இதனால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்காக தங்களிடம் தேவர் கவசத்தை ஒப்படைக்கக் கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 25 ஆம் தேதி வங்கி நிர்வாகத்தினர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைத்தது. இதையடுத்து தேவருக்கு அணிவிக்கப்பட்டு தேவர் ஜெயந்தியும், குருபூஜையும் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் பூஜைகள் செய்யப்பட்டு தேவர் தங்க கவசம் அகற்றப்பட்டது. பின்னர் அதற்கான பெட்டியில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் அந்த வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications