பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.. உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை.. கிலியில் அதிகாரிகள்
மதுரை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகாரில் சம்பந்தப்பட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றக் கிளை எச்சரித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளது. அந்த மருதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டன், தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் நீலகண்டன் வீட்டின் புகைப்படம், தங்கப்பொண்ணு மற்றும் வேறு சிலருக்கு பயன்படுத்தி உள்ளார்கள்.

இதில் தங்கப்பொண்ணு என்பவர் கடந்த 2020 அக்டோபரில் மரணம் அடைந்துவிட்டார். ஆனால், தங்கப்பொண்ணு உயிருடன் இருப்பதுபோல போலி அடையாள அட்டை தயாரித்திருக்கிறார்கள். இப்படித்தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுபற்றி விசாரிக்க, லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் உதயகுமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த முறை விவசாரணைக்கு வந்த போது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரிக்கப்பட்து.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் , பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஏழைகளுக்குப் பயனளிக்கும் திட்டம். இந்த திட்டத்தின் நோக்கமே சிதைக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கான பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம். ஹைகோர்ட் உத்தரவிட்டும், மாவட்ட கலெக்டர் அறிக்கை அளித்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இந்த திட்டத்தைக் கண்காணிக்க வேண்டிய மாவட்ட கலெக்டர், தனது பணியைச் சரியாக மேற்கொள்ளவில்லை. கடைநிலை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பியை இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கிறோம்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டமுறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேடு வழக்கை கடைநிலை ஊழியர்களுடன் முடிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. எனவே, முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் வழக்குபதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும். இந்த வழக்கு நவம்பர்ர 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications