மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் “மெயின்” குற்றவாளிகளே இவங்கதான்.. 2 பேரை தூக்கிய போலீஸ்!
மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் வழக்கம் போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே உள்ள வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது பாலசுப்பிரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் சரிந்து விழுந்த பாலசுப்பிரமணியனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். சம்பவம் நடத்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனின் நேரடி கண்காணிப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் பாண்டியராஜனின் சகோதரரும் நாதக நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான பாலசுப்ரமணியன், மகாலிங்கத்திடம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சுமுகமாகத் தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகு விஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். திருமணமான பிரியா அழகு விஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பாண்டியராஜன் மற்றும் மாகலிங்கம் இடையே மீண்டும் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியராஜன் அளித்த புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த மகாலிங்கத்தை, பாண்டியராஜனும் பாலசுப்பிரமணியனும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட மாகலிங்கம், தன்னிடம் லோடு மேன்களாக வேலை பார்த்து வந்த பரத், கோகுலகண்ணன், பென்னி மற்றும் ஒரு சிறார் என 4 பேரை கொண்ட கும்பலை வைத்து பாலமுருகனை வெட்டிப் படுகொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த மாகலிங்கம் மற்றும் மகன் அழகு விஜய் ஆகியோர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையில் ஈடுபட்ட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாலிங்கம், அவரது மகன் அழகு விஜய் ஆகிய இருவரையும் தல்லாகுளம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications