மதுரை ஜல்லிக்கட்டு.. தயாராகும் வாடிவாசல்.. காளைகளுக்கும் வீரர்களுக்கும் முன்பதிவு.. இன்றே கடைசி
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்கநால்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளமான madurai.nic.in என்ற இணையதளத்தில் வீரர்கள் இன்று பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாக்கள் முறையே ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முகூர்த்தக்கால் நடப்பட்டு வாடிவாசல் தயாராகி வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியுள்ளது.
காளைகள், மாடுபிடி வீரர்கள் இன்று பகல் 12 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். madurai.nic.in என்ற இணையதளத்தில் வீரர்கள், காளைகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு மாட்டிற்கு தகுதி சான்றிதழ் பெற்று, வேறு நபரின் ஆதார் மூலம் முன்பதிவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஊரில் விளையாடும் மாடும், வீரர்களும் வேறு ஊர்களில் போட்டியிட அனுமதி இல்லை. முறைகேடுகளை தவிர்க்க QR Code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை, மற்றொரு ஜல்லிக்கட்டில் பங்கேற்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் ஒரே காளைக்கு அலங்காநல்லூர், பாலமேட்டில் காளை உரிமையாளரை மட்டும் ஆள் மாறாட்டம் செய்து அவர்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி கால்நடை துறையினரை ஏமாற்றி தகுதிச்சான்று பெறுவதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
கால்நடைத் துறையினரால் இந்த ஆள்மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியாது. அதனால், ஒரே காளை ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் டோக்கன் வழங்கும்போது இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று காளை உரிமையாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications