என்னாது ஒரு லிட்டர் தாமிரபரணி தண்ணீர் ஒரு பைசாவா? அதிர்ந்த மதுரை கிளை நீதிபதிகள்
மதுரை: தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் தண்ணீருக்கு 1 பைசா கட்டணம் செலுத்துவதை அறிந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுவாமிநாதனும், புகழேந்தியும் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்துலாம்குறிச்சியை சேர்ந்த எழுத்தாளர் காமராஜ், தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் எடுக்கும் நீர் மற்றும் அதற்கு வசூலிக்கப்படும் விலையை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், " தாமிரபரணியில் இருந்து நிறுவனங்கள் எடுக்கும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு பைசா என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் ஒரு லிட்டர் நீர் பாட்டிலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், அவர்களிடம் இருந்து ஒரு லிட்டருக்கு ஒரு பைசா வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து எத்தனை தனியார் நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டிற்காக தண்ணீரை எடுக்கின்றன. இதுவரை எடுத்த தண்ணீருக்கு கட்டணமே செலுத்தாத நிறுவனங்கள் எத்தனை, அவை எவை, கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ள நிறுவனங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொதுப்பணித் துறை நிர்வாக பொறியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் சங்கமுகம் அருகே கடலில் கலக்கிறது. இது நெல்லை- தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை தீர்த்து, விவசாயத்திற்கும் உதவுகிறது.
சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண தேவர்கள், முனிவர்கள் என கூட்டம் கூட்டமாக சென்றதால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர தொடங்கியது. அப்போது அகத்திய முனிவரை அழைத்த சிவன், தென் திசைக்கு செல்லுமாறு கட்டளையிட அவரும் அங்கு சென்றார்.
அவர் அங்கிருந்தபடியே சிவனின் திருக்கல்யாணத்தை கண்டு ரசித்தார். இதனால் பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி கல்யாண தீர்த்தம் என பெயர் பெற்றது.
இந்த தாமிரபரணிக்கு காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இந்த தாமிரபரணி ஆற்று நீரில் செய்யப்படுவதால்தான் அங்கு கிடைக்கும் இருட்டுக் கடை அல்வா ருசியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications