மதுரை மேலூரில் சாரல் மழை.. பலத்த காற்றால் ‘பவர் கட்‘!
மதுரை: மேலூரில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் சில மாவட்டங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்று மாலையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.
பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இருப்பினும் காற்று பலமாக வீசியதால் மேலுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சேலம் நான்கு ரோடு, டவுன், சீலநாயக்கன்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.