ராஜன் செல்லப்பா கோபத்தில் நியாயம் இருக்கத்தானே செய்யுது.. !
Recommended Video
மதுரை: மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திடீரென குமுறியதாக தோன்றினாலும் கூட கிட்டத்தட்ட அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக இப்படித்தான் உள்ளுக்குள் குமைந்து கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி என 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
இதில் கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுக வென்ற தொகுதிகள் 8. திமுக 2 தொகுதிகளில் (மதுரை மத்தி, மதுரை கிழக்கு) வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான போஸ் மரணமடைந்தார். அங்கு நடந்த இடைத் தேர்தலில் திமுகவின் சரவணன் வெற்றி பெற்று விட்டார்.
திருப்பரங்குன்றம் இழப்பு
திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை போன்ற தொகுதி. கடந்த 1996ம் ஆண்டுதான் கடைசியாக இங்கு திமுக ஜெயித்தது. 2001 தேர்தலில் சீனிவேல் வென்று அதிமுக பக்கம் கொண்டு வந்தார். அது முதல் கடந்த 19 வருடமாக அதிமுக பக்கம் இருந்த தொகுதியை இப்போது திமுக பறித்து விட்டது. அதுவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்.
ஒற்றுமையின்மையால் தோல்வி
மிகவும் எளிதாக வென்றிருக்க வேண்டிய தொகுதி இது. ஆனால் வலுவான போட்டியாளரை நிறுத்தாமல், ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அமமுகவினரின் வாக்குப் பிரிப்பால் தொகுதியை இழந்தது அதிமுக. இதுதான் ராஜன் செல்லப்பாவின் கடும் உளைச்சலுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். காரணம் இவரை முழுமையாக இந்தத் தொகுதியின் பொறுப்பாளராக அதிமுக இறக்கி விடவில்லையாம். இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
தலைமை மீது புகார்
இன்றைய அவரது பேட்டியிலும் கூட அதைத்தான் அவர் கூறியிருந்தார். கட்சியினரிடையே ஒற்றுமை இல்லை. ஒருங்கிணைந்த தலைமை இல்லாததே இதற்குக் காரணம் என்று ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். அதை விட முக்கியமாக, ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும்.
யார் சிறந்தவர்
அது யார் என்பதை பொதுக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. அல்லது இதைவிட சிறப்பானவர்கள், இருந்தாலும் அவர்களை பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என்றும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். இது முக்கியமாக கவனிக்கத்தக்கது.
மேலும் குரல்கள் வரலாம்
ராஜன் செல்லப்பா கூறிய பல தகவல்கள் எடப்பாடி தரப்பிற்கு எதிராக இருப்பதாகவும், அவர் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசியிருப்பதாகவும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ராஜன் செல்லப்பாவின் குரலுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் மதுரையிலிருந்து மேலும் சில போர்க்குரல்கள் ஒளிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.