அப்ப… ரஜினிகாந்த் எங்களுக்கு தான் ஓட்டு போட சொல்லிருக்காரு.. அமைச்சர் உதயகுமார் குஷி
மதுரை: லோக்சபா தேர்தல் நிலை குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு, எங்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது என்று வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அரசியல் பிரவேசம் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் எப்போது தேர்தலில் முழு வீச்சாய் இறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்ற அறிவிப்பு... ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை, சட்டசபை தேர்தல்தான் நமது இலக்கு என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நடைபெறும் தேர்தலில் தமது ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது. தமிழகத்தின் முக்கிய பிரச்னை தண்ணீர்.
வரவிருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, யார் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைபடி பார்த்தால் அதிமுகவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவை அவர் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு தடையில்லா தண்ணீர் வழங்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வறட்சியிலும் சரியான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
குடிநீருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்துள்ளார். எனவே ரஜினி பேசியிருப்பது அதிமுகவுக்குத்தான் ஆதரவு போல் தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications