அழகரே நடந்து வர்ற மாதிரி இருந்துச்சு.. தீர்ப்பு தெய்வ வாக்கு.. உணர்ச்சிவசப்பட்ட ஆர்பி உதயகுமார்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், திருமண விழா மேடையே உணர்ச்சிமயமாக இருந்தது.
மதுரை : மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உள்ளிட்ட 51 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று திருமணம் நடைபெற்றது. அப்போது தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. இதையடுத்து இந்த நிகழ்வில் பேசிய ஆர்.பி.உதயகுமார், உச்சநீதிமன்ற தீர்ப்பு தெய்வ வாக்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி எனப் புகழ்ந்தார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருந்ததால், மதுரை அருகே டி.குன்னத்தூரில் நடைபெற்ற இந்த திருமண விழா மேடையில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். தலைவர்கள் மேடையில் இருக்கும்போதே உச்ச நீதிமன்ற தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்ததால், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் உற்சாகமடைந்தனர்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது மதுரையில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

மேடையில் இருந்தபோது வந்த தீர்ப்பு
மதுரை அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இன்று 51 ஜோடிகளுக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிகளில் ஆர்.பி.உதயகுமார் மகள் திருமணமும் ஒன்று. இந்த 51 ஜோடிகளின் திருமணம் இன்று பிரம்மாண்டமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது.

மகிழ்ச்சி பொங்க
இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகள், ஈபிஎஸ் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்த சூழலில் தான் இன்று தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது. இதனால், அதிமுகவினர் மத்தியில் பதற்றம் நிலவி வந்தது. திருமண விழா பரபரப்புக்கு இடையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றித்தான் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட ஈபிஎஸ் அணியினர் சிந்தித்து வந்தனர். இந்நிலையில், இன்று திருமண விழா மேடையில் இருந்தபோதே தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் ஆர்பி உதயகுமார் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

அழகரே வந்தது போல
இந்த திருமண விழா மேடையில் ஆர்பி உதயகுமார் பேசுகையில், "இந்த திருமண விழா மேடைக்கு வரும்போது அனைவரும் மவுனமாக இருந்தோம். எடப்பாடியார் மேடைக்கு வரும்போது பின்னணியில் மக்களின் முதல்வர் என்ற பாட்டு ஒலித்தது. அந்த பின்னணியில் அவர் நடந்து வருவதை பார்க்கும்போது அழகர் நடந்து வருவது மாதிரி இருந்தது. அதனை உண்மை என்று மெய்ப்பித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அம்மா நம்மோடு இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, தெய்வ வாக்காக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.

தெய்வ வாக்கு
உச்சநீதிமன்ற தீர்ப்பு தெய்வ வாக்கு. அம்மாவை வேண்டி நின்ற எங்களுக்கு இந்த தீர்ப்பு உற்சாகத்தை அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களும் எடப்பாடியார் தான் முதல்வர் என்கிற தீர்ப்பினை விரைவில் அளிப்பார்கள். அதன் முதல் வெற்றியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும்.

சிம்ம சொப்பனம்
முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவர் எடப்பாடியாருக்கு எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புக்கு மத்தியில் 51 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்" எனப் புகழ்ந்து பேசினார் ஆர்பி உதயகுமார்.












Click it and Unblock the Notifications