காந்தி சிலைக்கு காவி துண்டு.. பாஜக நிர்வாகி செய்த காரியத்தால் மதுரையில் சர்ச்சை
மதுரை: மதுரையில் காந்தி சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் மரியாதை செலுத்தியபோது காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியின் உருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு இடங்களிலும் காந்தியின் உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அந்தவகையில், மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கும் பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர். அப்போது, பாஜகவினர் மரியாதை செலுத்தும்போது காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் ஆலயம் மற்றும் ஆன்மீக பிரிவின் மாநில பொறுப்பாளராக உள்ள சிவப்பிரகாசம் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த வந்தார். அப்போது, அவர் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காந்தி அருங்காட்சியக நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications