செல்போனில் பேசியபடி காரை ஓட்டிய வழக்கு! டிடிஎப் வாசன் மீது 308 பிரிவின் கீழ் வழக்கு! அதென்ன செக்ஷன்?
மதுரை: மதுரை அருகே செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Twin throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதன் மூலம் பைக் சாகச வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். சினிமா நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

தனது வீடியோக்களில் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டாதீர்கள். ஸ்டன்ட்களை முறையாக கற்று செய்யுங்கள், ஆள் இல்லாத சாலைகளில் மட்டுமே சாகசம் செய்யுங்கள் என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
ஆயினும் காஞ்சிபுரத்தில் அவருடைய இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரத்தில் விலையுயர்ந்த பைக்கில் வாசன் அதிவேகமாக சென்ற போது விபத்து ஏற்பட்டு சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அவர் காஸ்ட்லி ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் தப்பினார்.
இது தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பைக் ஓட்டுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அவருடைய இரு சக்கர வாகனத்தை எரித்தால் என்ன என்றும் யூடியூப் சேனலை முடக்கினால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், காரை அஜாக்கிரதையாகவும் கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்விதமாக செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டியதை கேமராவில் பதிவு செய்து அவருடைய யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.
இது மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடக கண்காணிப்பு காவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல் துறையினர் வாசன் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக காரை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக காரை இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சென்னையில் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஏற்கெனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காரில் செல்போனில் பேசியபடியே ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் நேற்று அவரை மதுரை அண்ணாநகர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்காக 308 பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 308 பிரிவு என்பது பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் என்பதாகும். இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததால் அவரால் ஜாமீனில் வெளியே வர முடியாது.
காஞ்சிபுரம் விபத்தில் சிக்கிய வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications