Manjappai Parota: அப்போ மாஸ்க் புரோட்டா.. இப்போ மஞ்சப்பை புரோட்டா.. மதுரையில் அசத்தும் ஹோட்டல்
மதுரை: மதுரையை தற்போது மீண்டும் மஞ்சப்பை பரோட்டாக்கள் கலக்கி வருகின்றன. மஞ்சப்பை வடிவில் போடப்படும் பரோட்டாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.
Recommended Video
மஞ்சப்பை எப்படி இருக்குமோ அதே வடிவத்தில் பரோட்டாக்களை மாஸ்டர்கள் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளன.
பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. இதை கருத்தில் கொண்டு மஞ்சப்பை பழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டி மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

மீண்டும் மஞ்சப்பை
இதையடுத்து மஞ்சப்பை ஊக்குவிக்க வியாபாரிகளும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை கொடுக்கிறார்கள். மஞ்சபையை கொண்டு வந்தால் காய்கறி ஒரு கிலோவுக்கு கணிசமான தொகையை குறைத்து விற்பனை செய்வதாக அறிவிக்கிறார்கள். அது போல் மஞ்சபையுடன் வந்தால் இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும். பிரியாணி ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சப்பை புரோட்டா
இந்த நிலையில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மதுரையில் ஹோட்டல்களில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள உணவகத்தின் புதிய முயற்சியாக பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கி ஊக்குவிக்கின்றனர். அது போல் மஞ்சபையை போல் வடிவம் கொண்ட புரோட்டாவை தயார் செய்து அதில் மீண்டும் மஞ்சப்பை என எழுதியுள்ளார்கள்.

விழிப்புணர்வு
மதுரையில் உள்ள சுப்பு அசைவ உணவகத்தை சகோதரர்கள் ஆன நவநீதன் (47), குணா (28) ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உணவகங்களில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கியும் முகக்கவசங்களை வழங்கியும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா போண்டா
இதே போன்று மதுரையில் கடந்த ஆண்டில் மாஸ்க் வடிவிலான புரோட்டா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் கொரோனா போண்டாவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன. தற்போது மஞ்சப்பை டிவிட்டரில் டிரென்டாகி வருகிறது.













Click it and Unblock the Notifications