Sundar C: ஏசி சண்முகத்தின் ஆஸ்தான இயக்குநர்.. சுந்தர் சி வேட்பாளரானது எப்படி? பின்னணியில் குஷ்பு!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தீவிர அரசியலில் கூட ஈடுபடாத சுந்தர் சி திடீரென அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக நிறுத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் குஷ்பு இருப்பதாகவும் ஒரு தரப்பு சொல்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக கூட்டணி புதிய நீதிக் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிட உள்ளனர். அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மதுரையில் புதிய நீதிக் கட்சி சார்பாக வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடியில் சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர் சி, தானும் ஒரு பிள்ளை சமூகத்தை சார்ந்தவன் என்று பெருமையாக பேசினார்.
அப்போதே சுந்தர் சியின் பேச்சு சர்ச்சையாகியது. கடந்த சில நாட்களாகவே வெள்ளாளர் சமூகத்தை முன்னிறுத்தி புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். அதேபோல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக ஒரு ஸ்டார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாஜக எண்ணியது.
அதேபோல் சுந்தர் சி நீண்ட காலமாகவே ஏசி சண்முகம் தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். அரண்மனை 3, அரண்மனை 4, காஃபி வித் காதல், மத கஜ ராஜா, கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களை ஏசி சண்முகம் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், சுந்தர் சியின் படங்களை மட்டுமே ஏசி சண்முகம் தயாரித்திருக்கிறார்.
அதேபோல் பாஜக சார்பாக இம்முறை குஷ்புவுக்கு சிட் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏசி சண்முகத்தின் ஆஸ்தான இயக்குநரான சுந்தர் சியை வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர். இதுவரை குஷ்புவுக்காக கூட சுந்தர் சி பெரிதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதே இல்லை. அதேபோல் அரசியலும் பெரியளவில் பேசியதே இல்லை. திடீரென தீவிர அரசியலில் முக்கியமான அமைச்சரவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்து களமிறங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications