உ.பி. 'அயோத்தி' போல தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மாற வேண்டும்.. பாஜக எச்.ராஜா சர்ச்சை பேச்சு
மதுரை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி போல தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றமும் பிரச்சனையாக வேண்டும் என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. மேலும் அயோத்தி முதல் யுத்தம் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது என்றும் எச்.ராஜா பேசினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோவில் உள்ளது; இன்னொரு பக்கத்தில் சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை உள்ளன. சிக்கந்தர் தர்காவில் அனைத்து மத மக்களும் வழிபாடு நடத்துகின்றனர்; நேர்ச்சையாக ஆடு கோழி பலியிட்டு சமைத்தும் வழங்குகின்றனர். இதற்கு இந்துத்துவா இயக்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 100 ஆண்டுகளாக இது தொடர்பாக பல்வேறு வழக்குகள், தீர்ப்புகள் வழங்கப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வலியுறுத்தியும் அங்குள்ள தர்காவை வேறு இடத்துக்கு மாற்ற கோரியும் இந்துத்துவா இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின. இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி பிரம்மாண்ட போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி 1 மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்.
இந்த அனுமதியைத் தொடர்ந்து மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உத்தரப்பிரதேசத்திலும் இப்படித்தான் நடந்தது; இதனால் அங்கு இந்து விரோத அரசு ஆட்சிக்கே வர முடியாத சூழ்நிலை உருவானது. நீதிமன்றத்தில் 144 தடை உத்தரவு தொடர்பாக தமிழக அரசு தெரிவித்த போது, திருப்பரங்குன்றம் ஒரு அயோத்தியாக மாறிவிடக் கூடாது என்பதால் தடை விதித்தோம் என தெரிவித்திருக்கிறது; திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்; அயோத்தி போல முதல் யுத்தம், முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது; இந்துக்கள் ஒன்றாகாமலிருந்தால் தமிழ் கடவுள் முருகனை தரித்திரனாக்கவிடுவார்கள்; தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்.ராஜா பேசினார்.












Click it and Unblock the Notifications