கோபத்தில் திடீரென எழுந்து தனது அறைக்குள் சென்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.. ஷாக் ஆன வழக்கறிஞர்கள்!
மதுரை: "நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் போட்டியிடுவார்" என இரு நீதிபதிகள் அமர்வில் நேற்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதம் வைத்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இன்றைய விசாரணையில், இது தொடர்பாக கோபத்தில் கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன் திடீரென எழுந்து தனது அறைக்குள் சென்றுவிட்டார். இதனால், வழக்கறிஞர்கள் திகைத்து நின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை பின்பற்றாததை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நடைபெற்றது. விசாரணையின் போது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். இதேபோல், தமிழக அரசின் தலைமை செயலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், "நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காமல் விட்டால், சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தே அர்த்தமற்றதாகி விடும்" என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரம் மிக முக்கியமானது என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்களது நிலைப்பாட்டை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்றபோது தலைமை செயலர் கூறுகையில், "எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் பிறப்பித்தோம். தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதில் எந்த கருத்தும் இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது என்ன விதமான செயல்" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக கோபத்தில் கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன் திடீரென எழுந்து தனது அறைக்குள் சென்றுவிட்டார். இதனால், வழக்கறிஞர்கள் திகைத்து நின்றனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications