செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவிற்கு போகிறார்... செல்லூர் ராஜூ பேச்சு
மதுரை: அமமுக-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் தி.மு.க.வில் சேரப்போகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால், இடைத்தேர்தல் வந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறி வருகிறார்.
வருகிற மே 23 ம் தேதிக்கு பிறகு தமிழக அரசியலின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே, திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 46 பூத்களில் தப்பு நடந்திருச்சு.. மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு: சத்ய பிரதா சாஹூ தகவல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்து வருகிறார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனுக்கு அருகில் இருந்து கொண்டு, அவருக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் பேசி வருகிறார் என்றார்.
டிடிவி தினகரனின் வளர்ச்சிகோ அல்லது ஆதரவாகவோ தங்க தமிழ்ச்செல்வன் பேசவில்லை என்றும், தங்கத் தமிழ்ச்செல்வனின் பேட்டிகளில் தி.மு.க.வில் சேரப் போவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.