பூரண மதுவிலக்கே தீர்வு.. மதுரையில் திமுகவுக்கு ஜெர்க் கொடுத்த திருமா! செப்-17ஆம் தேதி மெகா சம்பவம்
மதுரை: மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு எனவும், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் அன்று விசிக சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் மாநாடு நடத்தப்படும் என மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மேலவளவில் பலியான சம்பவத்திற்கு நினைவு தினம் இன்று. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997ல் படுகொலை நடந்தது.
கள்ள சாராய, நச்சு சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வு பூரண மது விலக்கு. டாஸ்மாக் கடையிலும் பாதிப்பு உள்ளது. தேசிய அளவில் மது விலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும்.
மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவு. அயோத்தி கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.
நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை கோபப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன். அதில் பிழையும் உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. . நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என கூறியதாகவே நான் கருதுகிறேன். கள்ளு கடைகள் திறப்பதன் மூலம் கள்ள சாராய சாவுகள் தடுக்கப்படுமா? காந்தியடிகள் கள் உள்பட எந்த மதுவும் வேண்டாம் என்று தான் கூறி உள்ளார்.
தமிழக அரசு முதலில் படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளக்குறிச்சி விஷசாராய மரணத்தை நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான் மாண்புமிகு முதல்வர் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடினால் மக்ககளிடம் ஆட்சிக்கு நல்ல பேரும் ஏற்படும்.
ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று விசிக சார்பில் மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது. கள் விற்பனை, டாஸ்மாக் மது உள்பட எந்த வகை மதுவும் வேண்டாம். பூரண மது விலக்கு என்பதே தீர்வு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கூறினார்.












Click it and Unblock the Notifications