ஐஏஎஸ் தேர்வில் வென்ற பூரண சுந்தரிக்கு பார்வை குறைபாடு.. உதவிக் கரம் நீட்டிய எம்எல்ஏ டாக்டர்.சரவணன்
மதுரை: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூரண சுந்தரிக்கு கண்பார்வைக்கு உதவும் அதிநவீன ஆர்கேம் கருவியினை வழங்க திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் ஏற்பாடு செய்துள்ளார்.
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த செல்வி.பூரண சுந்தரி ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் 286வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பூர்ண சுந்தரிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
வாழ்த்துக்கள்
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், பூர்ண சுந்தரி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.இணையதளம் மூலம் அந்த பெண்னிற்கு ESIGHT என்ற சுமார் 8 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்ணாடியினை கனடா நாட்டில் இருந்து வரவழைத்து பார்வை கிடைக்க முயற்சி செய்தார்.
அதி நவீன கண்ணாடி
இதுகுறித்து, எம்எல்ஏ சரவணன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பை பாருங்கள்: பூர்ணசுந்தரியை மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார் டாக்டர் சரவணன். பரிசோதனையில் அவருக்கு பார்க்கும் அனைத்தும் ஒலியாக கொண்டு செல்லும் ஆர்கேம் என்ற அதிநவீன கருவி பொருந்தப்பட்ட கண்ணாடியினை பொருத்தலாம் என்று மருத்துவர்கள் குழு ஆலோசனை வழங்கினர்.
தொண்டு அமைப்பு
3 லட்சம் மதிப்பிலான ORCAM கண்ணாடியினை டாக்டர்.சரவணன், தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் வழங்க முன்வந்துள்ளார். அதனை கண்ணொளி திட்டம் கொண்டு வந்த கருணாநிதி வழியில் செயல்படும் திமுக தலைவர் ஸ்டாலின் கரங்களால் வழங்க ஏற்பாடு செய்யப் போவதாக டாக்டர் சரவணன் கூறினார்.
விழிப்புணர்வு
அதுமட்டுமல்லாமல் அதிநவீன ORBIT READER என்ற எளிதாக படிக்க உதவும் BRAILLE கருவியினையும் வழங்கவுள்ளதாக தெரிவித்தார். இது போன்று கண் பார்வை குறைபாடு உள்ள அனைவருக்கும் உதவும் ELECTRONIC GADGETS பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாராட்ட வேண்டிய விஷயம்தான்.