ஜாக்டோ ஜியோ போராட்டம்.. அரசுக்கு இடைக்கால உத்தரவு போட முடியாது.. கைவிரித்த ஹைகோர்ட்
Recommended Video
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான பொது நலன் வழக்கில் அரசுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் போட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கைவிரித்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று விசாரணை
இன்று 7-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விண்ணப்பங்கள்
இதனிடையே ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தும் பணிக்கு திரும்பாததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
கைது
அப்போது தமிழக அரசு மீது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சரமாரி புகார்களை அளித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்குகளை தமிழக அரசு போட்டு கைது செய்கிறது என்று ஜாக்டோ ஜியோ சார்பில் கூறப்பட்டது.
சரமாரியான கருத்து
இந்த நிலையில் நீதிபதிகள் கூறுகையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் அரசு ஏன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களும் பணி நிரந்தரம் கோரி போராடுவர், வழக்கு தொடருவர் என்று நீதிபதிகள் சரமாரியாக விமர்சனம் செய்தனர்.
தலையிட முடியாது
போராட்டத்தில் ஈடுபடாமல் வழக்கு தொடர்ந்திருந்தால் அரசிடம் கேட்டிருக்கலாம். அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக அரசுக்கு இடைக்கால உத்தரவை போட முடியாது. அரசின் நிதி நிலைமை தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர்.
ஒத்திவைப்பு
போராட்டம் அனைத்துக்கும் தீர்வல்ல. இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.