“சொந்த கட்சியினரை கொல்லும் நோக்கம் இல்லை”.. முன் ஜாமீன் வழக்கில் புஸ்ஸி ஆனந்த் வைத்த பரபர வாதம்
மதுரை: சொந்தக் கட்சியினரை கொல்லும் நோக்கம் இல்லை என உயர்நீதிமன்ற கிளையில் இன்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தரப்பினர் வாதம் வைத்துள்ளனர். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயண பிரசாரக் கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் மதியழகன் மற்றும் மற்றொரு நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, "கரூர் பலி திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்து, தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை" என அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்திய ஆனந்த், நிர்மல் குமாருக்கு பொறுப்பு இல்லையா? என்று நீதிபதி கேட்க, "நிகழ்ச்சியை நடத்தியது மாவட்டச் செயலாளர் மதியழகன். அவர் கைது செய்யப்பட்டுவிட்டார், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் இதற்கு பொறுப்பு அல்ல. இவர்களுக்கு முன் ஜாமீன் கொடுங்கள்" என்று தவெக தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் "இந்த இருவர் மட்டும் மக்களை கட்டுப்படுத்த முடியாது. உரிய பாதுகாப்பை வழங்கவே காவல்துறையிடம் பாதுகாப்பு கோருகிறோம். மற்ற மாவட்டங்களைப் போல கரூரிலும் கூட்டம் வரும் என காவல்துறை கணித்திருக்க வேண்டும். கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரை அரசுக்குதான் முழு பொறுப்பு இருக்கிறது" என்று அவர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
அரசுத்தரப்பில், "தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதம் வைக்கப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இருவரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து தேடிவரும் சூழலில், தற்போது முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications