மதுரையில் விஜய்யின் எழுச்சி.. 10 தொகுதியில் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு.. சிக்கலில் சீனியர்கள்!
மதுரை: மதுரையில் தவெகவின் எழுச்சி காரணமாக அதிமுக முன்னணி தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட்டால், ஒவ்வொரு தொகுதியில் பிரிக்கப் போகும் வாக்குகளை நினைத்து சீனியர்களே புலம்ப தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி வசம் மதுரை மாவட்டத்தின் தேர்தல் பொறுப்புகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. மதுரை மேற்கு தொகுதியில் இம்முறை திமுக கொடி பறக்க வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாக கூறி இருக்கிறார்.

இதனால் மதுரை மேற்கு தொகுதி திமுகவினருக்கு ஒவ்வொரு மாதமும் கிப்ட் பாக்ஸ், கைச்செலவுக்கு பணம், கிடா விருந்து என்று அமைச்சர் மூர்த்தி அமர்க்களப்படுத்தி வருகிறார். கடந்த தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுக கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், இம்முறை கூடுதலாக 2 தொகுதிகளையாவது வெல்ல வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது.
மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி, மணிமாறன் உள்ளிட்ட அவர்களின் தொகுதிகளில் வலிமையாக இருக்கின்றனர். அதேபோல் இம்முறை திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மேற்கு தொகுதியில் வெல்ல திமுக தீவிரம் காட்டி வருகிறது.
அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை மதுரை புறநகரில் வலிமையாக இருந்தாலும், மதுரை மாவட்டத்தில் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொந்த தொகுதியிலேயே தோற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தவெகவின் எழுச்சி மதுரை அதிமுகவினரை கலக்கம் அடைய செய்துள்ளது.
ஏனென்றால் மதுரையில் விஜய் நடத்திய மாநாட்டுக்கு பின் தவெகவின் வலிமையை அதிமுகவினர் தெளிவாக புரிந்து கொண்டனர். மதுரை மாவட்டச் செயலாளர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், விஜய் மீது அன்பு கொண்ட அவரின் ரசிகர்கள் வேறு யாருக்கும் வாக்களிக்கும் மனநிலையில் இல்லை. இதனால் திமுகவின் அதிருப்தி வாக்குகளை அதிமுக பக்கம் திருப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் தொடர்ச்சியாக தவெகவை கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர். ஏனென்றால் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தொகுதிக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகளை எளிதாக தவெக பிரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அது நடந்தால், அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications