திடீரென பிரேக்.. மோதிய டாடா ஏசி வாகனம்.. தலை சிதறி பலியான இளைஞர்கள்.. உசிலம்பட்டியில் சோகம்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் தலை சிதறி சம்பவ இடத்திலே பலியாகினர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டத்திலிருந்து பூ எடுத்துக் கொண்டு வந்த போது எதிர்பாராதவிதமாக மோதிய டாடா ஏசி வாகனத்தால் தலை சிதறி இரண்டு வாலிபர்களும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல வெள்ளைமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார், அபிஷேக். இரு வாலிபர்களும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இருசக்கர வாகனம்
ராஜ்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு பேரும் இன்று காலை தங்கள் தோட்டத்திலிருந்து பூ எடுத்துக் கொண்டு உசிலம்பட்டி பூச்சந்தைக்கு பூவை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்

கீழே விழுந்தனர்
உசிலம்பட்டி அருகே உள்ளது நடுப்பட்டி காலணி, அவர்கள் அந்த ஊரின் அருகே வந்த போது உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு நோக்கிச் சென்ற டாடா ஏசி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் ராஜ்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரு வாலிபர்களும் கீழே விழுந்தனர்.

இரண்டு பேரும் பலி
டாட்டா ஏசி வாகனத்தை பின் தொடர்ந்து வந்த வேன் ராஜ்குமார் மற்றும் அபிஷேக் மீதும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை நசுங்கி படுகாயமடைந்த ராஜ்குமார் மற்றும் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணை
சம்பவம் அறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications