வைகை அணையில் 6000 கனஅடி நீர் திறப்பு.. மதுரை தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
மதுரை: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் தரைப்பாலங்களை மூழ்கடித்துக்கொண்டு வெள்ள நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன கால்வாய், திருமங்கலம் மற்றும் மேலூர் குடிநீர் தேவைக்காக 2099 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வைகை அணை நிரம்பியுள்ளதால் தற்போது மதுரை மாவட்ட பாசன வசதிகளுக்காக அணையிலிருந்து வினாடிக்கு மொத்தம் 6099 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் அணையில் உள்ள 7 பெரிய மதகுகள் வழியாக வெளியேறுவதால் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்று பாலம் வழியாக கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரையில் இரண்டாவது நாளாக தரைப்பாலங்களை மூழ்கடி ஆழ்வார்புரம் சர்வீஸ் சாலை மற்றும் யானைகல் சர்வீஸ் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கல் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதே சாலைகளில் வெள்ளநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வைகை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கவே, செல்ஃபி எடுக்கவோ கூடாது என்றும் என்றும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications