மதுரையில் தீண்டாமை சுவர்.. களத்தில் இறங்கி போராடிய விசிக.. சம்பவ இடம் வந்த போலீஸ்.. என்ன நடந்தது?
மதுரை: மதுரை மாவட்டம் திண்டியூர் பகுதியில் தீண்டாமை மனப்பான்மையுடன் சுவர் கட்டப்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள், கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பாதை அமைக்கும் பணியை செய்து கொடுக்க வேண்டும் என்று விசிகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை அருகே புல்லட் ஓட்டிய தலித் கல்லூரி மாணவரின் கையை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென தீண்டாமை சுவர் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து விசிக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திண்டியூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என்று வெளியில் செல்வோர் அனைவரும் ஒரு பாதையை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்த பாதையில் திடீரென சிலர் பில்லர் அமைத்து சுவர் எழுப்பும் பணிகளை தொடங்கி இருக்கின்றனர்.
இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் அனைவரும் வேறு பாதையின்றி வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை பொதுமக்கள் பொது பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென தீண்டாமை எண்ணத்துடன் சுவர் எழுப்பப்பட்டிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.
இதனைத் தொடர்ந்து விசிக தரப்பில் ஏராளமான நிர்வாகிகளும், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் தீண்டாமை சுவர் கட்டுமானத்தை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை அறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதுமட்டுமல்லாமல் தீண்டாமை சுவர் கட்டப்படுவதாக கூறப்பட்ட இடத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். இதன்பின் முதற்கட்டமாக கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களிடம் பேசிய போது, இது எங்களின் பட்டா நிலம்தான்.
எங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக அதனை சுற்றி சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். அதற்கான பணிகள் மட்டுமே அங்கு நடைபெற்றது. தீண்டாமை எண்ணத்துடன் அங்கு எந்த சுவர் கட்டுமான பணியையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கான பாதையை ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications