வந்தவுடனே விஜய் சிஎம் ஆக முடியுமா? தனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா அண்ணாமலை? நயினார் நாகேந்திரன் நறுக்
மதுரை: விஜய் இதுவரை எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை, இப்போதுதான் வந்திருக்கிறார். அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிக்கும் வந்து விடுவோம் என்று நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து வாக்களிப்பார்கள் என்று சிந்தித்துப் பேச வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் தான் இருக்கிறார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டியைப் பொறுத்த அளவில் ஏற்கனவே 24 சதவீத வரியை 12 சதவீதமாகக் குறைத்து, தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் இந்திய மக்களுக்குக் குறைத்து இருக்கிறது பாஜக அரசு.
வாக்குத் திருட்டில் ஈடுபட்டுதான் மோடி வென்றார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது எனக் கூறிய ராகுல் காந்தி, எந்த ஆதாரத்தை வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர்கள் காலத்தில் வாக்குத் திருட்டு செய்திருக்கிறார்கள். நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும். அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்க முடியாது.

நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி தகுதி குறைந்துதான் எப்போதும் பேசுகிறார். தவெக தலைவர் விஜய் மீனவர்கள் குறித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்திருக்கிறார்கள். எத்தனை மீனவர்களைச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். தற்போது பிரதமர் மோடி 11 ஆண்டுகால ஆட்சியில் ஒருவரைக் கூட சுட்டுக் கொல்லவில்லை. தூக்கு தண்டனைக்குச் செல்ல இருந்த ஒருவரைக் கூட மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இப்போதும் இலங்கையில் இருக்கக்கூடிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் சொல்கிறார்.
விஜய் அரசியல்
விஜய் இதுவரை எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து வாக்களிப்பார்கள் என்று சிந்தித்துப் பேச வேண்டும். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக சிலர் கூறுகிறார்கள். அண்ணாமலை எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும் கட்சியில் இருக்கிறார். இது போன்ற சம்பவத்தைப் பரப்புவது ஊடகத்தின் வேலையா? திமுகவின் வேலையா? அவர்கள் கேட்கச் சொல்லி நீங்கள் கேட்கிறீர்களா? அந்த போஸ்டர் யார் ஒட்டினார் எனத் தெரியவில்லை.
அதிமுக
ஓபிஎஸ் டிடிவியை அதிமுகவில் இணைப்பது குறித்து, தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அவர்கள் உட்கட்சிப் பிரச்சனைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்வோம். அரசியலில் நிரந்தர எதிரியும் நண்பரும் இல்லை. கொள்கை அளவில் யாரும் கூட்டணி சேரவில்லை. திமுகவிலும் கொள்கை அளவில் கூட்டணி இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரிடம் ஆலோசனை கூட்டம் இருப்பதால் உடனடியாகச் செல்கிறார்.
இபிஎஸ்
இன்று ஒரு 2000 பேருக்கு கோயம்புத்தூரில் நலத்திட்ட உதவிகளை நாங்கள் வழங்குகிறோம். எல்லாத் திட்டங்களையும் பாஜக மற்றும் அரசியல் சார்பாகத் திட்டங்களை வழங்குகிறோம். தமிழகத்தில் எதையும் தரவில்லை எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி குறைத்த பிறகும் இன்னும் குறைக்கவில்லை என்று சொல்வார்கள். இபிஎஸ் தான் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவராக்கப் போகிறார் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். வெற்றி பெற்றதற்குப் பிறகு, மாணிக்கம் தாகூர் ஊருக்கே வரவில்லை. அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கிவிட்டு டெல்லியில் இருக்கிறார். அவருக்குத் தொகுதி மக்களின் பிரச்சனையே தெரியாது" என்றார்.












Click it and Unblock the Notifications