அண்ணன் மண்ணில் தம்பி..மதுரையில் மாநாடு நடத்தும் விஜய்! 500 ஏக்கரில் பிரம்மாண்டம்..இத்தனை ஏற்பாடுகளா?
மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துகிறார். இதற்காக 500 ஏக்கர் பரப்பளவு உள்ள பிரம்மாண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி வரவேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் புதுவராக இருந்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்து நிலையில் அக்டோபரில் விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
அதற்குப் பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி, பனையூர் பண்ணையார் என விஜய் மீது விமர்சனங்கள் இருந்தது. அவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்தது, சிவகங்கை அஜித் இல்லத்திற்கு நேரில் சென்றது, சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து கள அரசியல் செய்து வருகிறார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள இருக்கிறார். இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்களும் மாநில அளவில் நடைபெற இருக்கிறது. சேலத்தில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் அடுத்ததாக 5 மண்டல மாநாடுகள், 120 மாவட்ட மாநாடுகள், 12,500க்கும் மேற்பட்ட கிளைக் கழக பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதைவிட முக்கியமாக அடுத்த மாதம் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்திருக்கிறார் விஜய்.
மதுரையில் மாநாடு என விஜய் அறிவித்த போது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. காரணம் விஜயின் சினிமா வழிகாட்டியான விஜயகாந்த் பிறந்தது மதுரையில் தான். ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுரையில் இருந்துதான் விஜயகாந்த் தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் முதல் மாநில மாநாடு அரங்கேறியதும் மதுரையில் தான். இப்படி விஜயகாந்துக்கு நெருக்கமான மதுரையை விஜய் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் பயணத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநாட்டில் விஜயகாந்த் குறித்து நிச்சயம் விஜய் பேசுவார் என்கின்றனர். விஜயகாந்த் ஆதரவு வாக்குகளும் விஜய்க்கு கிடைக்கலாம் என்கின்றனர். இது ஒரு புறம் இருக்க மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக விருதுநகர் டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 300ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடும், 200 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட இருக்கிறது.
திருச்சி தொடங்கி திண்டுக்கல் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது தர்மபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், இருந்தும் புதுக்கோட்டை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் இருந்தும், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்தும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாநாட்டை போலவே பிரம்மாண்ட கொடி கம்பமும் ஏற்றப்பட இருக்கிறது. இதற்காக தனியாக 5 வருடத்திற்கு ஒரு நிலம் குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் மூன்று லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த மாநாட்டை போல ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளுக்காக தனியாக 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தன்னார்வலர்களாக பத்தாயிரம் பேரும், 500 பேர் மருத்துவ பணியிலும் ஈடுபட இருக்கின்றனர் என்கின்றனர் மதுரை மாவட்ட நிர்வாகிகள். மதுரையை பொறுத்த வரை அதிமுக, தேமுதிக ,மக்கள் நீதி மையம் என பல கட்சிகளில் முக்கிய தேர்வாக இருக்கிறது. ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக செயற்குழுவை அங்கு தான் நடத்தியது.
வட மாவட்டங்களில் விஜய்க்கு செல்வாக்கு இருக்கும் நிலையில், தென் மாவட்ட செல்வாக்கை பறைசாற்றும் வகையிலே மதுரையை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் என்கின்றனர் அவர் கட்சியினர். மேலும், பல கட்சிகளைப் போல அல்லாமல் தங்கள் சொந்த செலவிலேயே தொண்டர்களை திரட்டி வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தீவிரம் காட்டி வருகின்றனர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications