செளராஷ்டிரா மக்களின் ஆதரவு.. மதுரை அரசியலே மொத்தமாக மாறிப்போச்சு.. தவெக எழுச்சியின் பின்னணி!
மதுரை: மதுரையில் செளராஷ்டிரா சமூக வாக்குகளை தவெக வேட்பாளர்கள் மொத்தமாக அறுவடை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை தெற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி ஆகிய தொகுதியில் கணிசமாக வசிக்கும் செளராஷ்டிரா சமூக மக்கள், தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக 71 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதில் மதுரையில் மட்டும் 7 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றிருக்கின்றனர்.

மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கோபிசன் 17 சுற்றுகள் முடிவில் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கல்லணை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல் குமார் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும், மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
மதுரையில் இந்த தொகுதிகளில் செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். மதுரையின் நகர்ப் புறங்களில் சுமார் 14 லட்சம் செளராஷ்டிரா மக்கள் வசிக்கிறார்கள். இதனால் செளராஷ்டிரா சமூக வாக்குகள் மொத்தமாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற கோபிசன் செளராஷ்டிரா தான்.
அவர் தனது பிரச்சாரத்தின் போதும் செளராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகாரித்தார். அதேபோல் செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகம் வசிக்காத திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த சில தேர்தல்களாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த செளராஷ்ரா மக்கள், இம்முறை விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனால் மதுரையின் அரசியலே மொத்தமாக மாறி இருப்பதாக தெரிகிறது. இதனால் மதுரையில் வரும் காலங்களில் செளராஷ்டிரா சமூக மக்களுக்கும் ஒவ்வொரு கட்சிகளும் பிரதிநிதித்துவம் அளிக்கும் சூழல் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இது மதுரை மக்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications