வைகை அணையில் நீர் திறப்பு.. மகிழ்ச்சி வெள்ளத்தில் பூர்வீக முதல் கண்மாய் பாசன விவசாயிகள்!
மதுரை: இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று வைகை அணையிலிருந்து கண்மாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் முலம் 6,005 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.
201 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48.13 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 292 கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து வரும் 6 நாட்களுக்கு தினசரி 400 கன அடி வீதம் 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தற்போது மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாடு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் வைகை அணையில் இருந்து வைகை ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நீர் நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் எனவும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications