என்னோட மெஷின் பெரியது.. சுஜித் விழுந்த குழி குறுகலானது.. வருத்தமாக இருக்கிறது.. மதுரை மணிகண்டன்
கடைசி கட்டத்தில் என்ன நடந்தது என்று மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
மதுரை: "நான் வைத்துள்ள ரோபாட்டிக் மெஷின் சற்று பெரியது. காரணம் பெரும்பாலான போர்வெல் குழிகளின் அகலத்தை வைத்துத்தான் நான் அப்படி டிசைன் செய்துள்ளேன். ஆனால் சுஜித் விழுந்த போர்வெல் இடைவெளியே இல்லாமல் குறுகியதாக இருந்தது" என்று மதுரை மணிகண்டன் கூறியுள்ளார்.
போர்வெல் குழிகளில் விழும் குழந்தைகளை மீட்பதற்காகவே சிறப்பு ரோபாட்டிக் மெஷினை உருவாக்கியவர் மதுரை மணிகண்டன். இதை வைத்து பல மீட்பு முயற்சிகளுக்கு அவர் உதவி வருகிறார். சங்கரன்கோவிலில் ஒரு குழந்தையை மீட்க பெரும் உதவி புரிந்தவர் மணிகண்டன்.
சுஜித் மீட்பு முயற்சிகளிலும் கூட மணிகண்டன் தான் ஆரம்பத்தில் ஈடுபட்டார். திருச்சி கலெக்டரின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக திருச்சி விரைந்த அவர் நடுக்காட்டிப்பட்டியில் சுஜித்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவரால் சுஜித்தை மீட்க முடியாமல் போய்விட்டது.

சிக்கல்
ஏன் இந்த சிக்கல் என்பது குறித்து மணிகண்டன் கூறுகையில், "வழக்கமான போர்வெல் குழிகளின் அகலத்தை அடிப்படையாக வைத்துத்தான் எனது ரோபாட்டிக் மெஷினை நான் டிசைன் செய்துள்ளேன். உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை அப்படியே கவ்விப் பிடித்து எனது ரோபாட்டிக் மெஷின் மூலம் மேலே கொண்டு வந்து விட முடியும்.

இடைவெளி
இதே முறை மூலமே சுஜித்தை மீட்கவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் என்ன சிக்கல் ஏற்பட்டது என்றால் சுஜித் விழுந்து கிடந்த இடம் போதிய இடைவெளி இல்லாமல் குறுகலாக இருந்தது. இதனால் எனது மெஷினால் போக முடியவில்லை. அந்த சமயத்தில் எனது மெஷினால் எளிதில்தூக்கி விடக் கூடிய தூரத்தில்தான் சுஜித் இருந்தான்.

பலன் தரவில்லை
ஆனால் மெஷின் அகலமாக இருந்ததால் அவனை நெருங்க முடியவில்லை. இதையடுத்து லேத்துக்குச் சென்று மெஷினின் அகலத்தைக் குறைத்தோம். பின்னர் மீண்டும் முயற்சிகளில் இறங்கியபோது 26 அடியிலிருந்த குழந்தை 80 அடியைத் தாண்டி போய் விட்டது. இதனால் எனது முயற்சிகள் பலன் தராமல் போய் விட்டன.

விருப்பம்
இது எனக்கு வருத்தம் தருகிறது. போர்வெல் அகலம் வேறுபடுவதை உணர்ந்துள்ளேன். இனி அதற்கேற்றார் போல பல்வேறு அளவுகளில் எனது மெஷினை வடிவமைக்கவுள்ளேன். ஆனால் எனது விருப்பம் என்னவென்றால், எனது கருவிகளை பயன்படுத்தும் சூழலே வரக் கூடாது. அப்படிப்பட்ட பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நேரம் இது என்றார் மணிகண்டன்.
மணிகண்டன் முயற்சி தோற்றாலும் கூட கடைசி வரை அந்த இடத்திலேயே இருந்து மீட்புப் படையினருக்கு உதவியபடியேதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications