காதல், கல்யாணம்னு கூடி வந்த வேளையில்! போனை எடுக்காத காதலி! கோபத்தில் ஐடி ஊழியர் எடுத்த முடிவு!
மதுரை: கோபம் ஒரு மனிதனை எந்த அளவுக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. அது போல் வாழ்வில் நிதானமின்மையால் எத்தனை பெரிய சிக்கல்கள் வருகின்றன என்பதையும் பலரது அனுபவங்கள் வாயிலாக பார்க்கிறோம். அந்த வகையில் மதுரையில் கேரள ஐடி ஊழியருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கேரளா மாநிலம் ஆலப்புழா புலின்குன்னு காயல்புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார்.

இவருடைய மகன் அருண் விஜய் (21). மதுரையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே பிசிஏ 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அருண் விஜய், பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் ஐஸ்வர்யாவை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த பெண் கேரளாவை சேர்ந்தவர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த நிலையில் இரு வீட்டாரும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர். இதன்படி கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
காதலிக்கும் போது இருவரும் செல்போனில் பேசிக் கொண்டே இருப்பார்கள். பொதுவான நியதி இதுதான். இதில் நிச்சயம் ஆகிவிட்டால் சொல்லவா வேண்டும். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டே இருந்து வந்துள்ளனர். கடந்த 27 ஆம் தேதி வீடியோ காலில் இருவரும் பேசியதாக தெரிகிறது.
அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் போன் இணைப்பை துண்டித்துவிட்டு கோபத்தில் இருந்தனர்.அப்போது அருண் விஜய், ஐஸ்வர்யாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா போனை எடுக்காததால் அருண் விஜய்க்கு கோபம் வந்துவிட்டது.
இதனால் அவரை மிரட்டுவதற்காக தான் தற்கொலை செய்வதாக ஐஸ்வர்யாவுக்கு, அருண் விஜய் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் பதறிய ஐஸ்வர்யா, உடனே அவருடைய அறையில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த தகவலை சொன்னார். இதையடுத்து அவரது நண்பர்கள் அறைக்குச் சென்று பார்த்த போது அருண் விஜய் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அவரை உடனே கீழ இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் மாட்டுத்தாவணி போலீஸார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஒரு கோபம் மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications