எங்கள் பெரியார் பஸ் ஸ்டேண்ட் .. அதே போல திரும்ப கிடைக்குமா?.. ஏக்கத்தில் மதுரை
Recommended Video
மதுரை: "மல்லி மல்லி, வெள்ளரிக்காய் வேணுமா, பாப்பா பாத்து இறங்குப்பா , பெரியார்ல தமிழக எண்ணை பலகாரத்துக்கு முன்னால நிக்கிறேன் வந்துருங்க" என்ற பலவித குரல்களின் கூட்டு கலவைகள் காதில் விழுந்து துளைத்தெடுத்த இடம்தான் மதுரை பெரியார் பஸ் ஸ்டேண்ட்! இன்றைக்கு அந்த முகம் தெரியாத குரல்களுடன் பெரியார் பஸ் ஸ்டேண்ட் என்ற அடையாளத்தையும் இழந்து நொறுங்கி போய் உள்ளனர் மதுரைவாசிகள்!
அன்றிலிருந்தே மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களின் இதய துடிப்பாய் இருந்ததுதான் இந்த பெரியார் பஸ்ஸ்டேண்ட்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிறகு தாமாகவே நினைவுக்கு வந்து போவது பெரியார் பஸ் ஸ்டேண்ட் என்ற பெயர்தான். தந்தை பெரியாரின் பெயரில் தொடங்கப்பட்டாலும் 70 வருஷங்கள் கடந்தும், அதே சமத்துவத்தை தாங்கி நின்ற பெருமைக்குரியது.
காதல், ஏழ்மை, அன்பு, பாசம், தியாகம், நட்பு போன்ற பலவித உணர்வுகள் இந்த பஸ் ஸ்டேண்டில் இழைந்தோடியது. புது புது உறவுகளின் அறிமுகங்களை மனதுக்குள் கொண்டு செல்ல அடித்தளமாக கரணமாக இருந்தது இந்த பஸ் ஸ்டேண்ட்.
இந்த பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றாலே இளம் ரத்தங்களில் போராட்ட வீரியம் கூடி ஓடும். அதனால்தான் திராவிட கட்சிகள் , தேசிய கட்சிகள், மாணவா்கள், பெண்கள் போராட்டம் என அத்தனை போராட்டங்களையும் இங்கு நடத்தப்பட்டன.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஏன் தொலைந்தவர்களின் காலடிகளை கூட லட்சக்கணக்கில் பாரம் பார்க்காமல் சுமந்திருக்கிறது இந்த பஸ் ஸ்டேண்ட்!
மதுரையில் எந்த மூலைக்கு போக வேண்டும் என்றாலும், மதுரை பஸ் ஸ்டேண்ட் என்ற வார்த்தையை வலுக்கட்டாயமாக உச்சரிக்கும் அளவுக்கு முக்கியத்துவத்தை பெற்றிருந்ததை உள்ளூர் மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
பள்ளி, கல்லூரி சொல்லிக் கொடுக்காத பாடத்தை மாணவர்களுக்கு அனுபவ ரீதியாக கண்ணெதிரிலேயே கற்று கொடுத்தது. கூடவே இளைஞா்களுக்கு உழைத்து உண்ண வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் தந்தது. பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் நினைவுகளை பகிர்ந்து ஒருவொருக்குவா் நட்பையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இந்த பஸ் ஸ்டேண்டுக்குள் நுழையும்போதே சாதி, மதங்களை கழட்டி எறிந்த உணர்வுகளை உருவாக்க நின்றது.
இங்கு நுழையும் போதே மண் மணக்கும் குண்டு மல்லியும், தித்திப்பை உறவுகளுக்கு கொண்டு செல்ல தமிழக எண்ணைய் பலகாரமும், ஓட்டுநர், நடத்துநருக்கு உற்சாகம் தரும் டோக்கன் கடை டீயும், இளைஞா்களை உற்சாகமூட்டும் ரோஸ்மில்க் கடையும் பெரியார் பஸ் ஸ்டேண்டின் தவிர்க்க முடியாத அடையாளங்கள்.
ஆனால் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இன்று இடிக்கப்பட்டு மூடப்பட்டு விட்டது இந்த பஸ் நிலையம். பெரியார் என்றே மரியாதையுடன் அழைத்து வருவதே இவை அனைத்தையும்விட சிறப்பு. அதே உணர்வோடு புதிய பரிமாணத்தோடு திரும்பவும் பெரியார் பஸ் பெரியார் உருவாக வேண்டும் என்பதும், விரைந்து பணிகளை முடித்துக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுமே மதுரை மக்களின் கோரிக்கை.
தனியார் பேருந்துகளை கடைசிவரை உள்ளே நுழைக்காமல் அரசு பேருந்துகளின் அரசனாக இருந்த எங்கள் பெரியார் பஸ் ஸ்டேண்ட் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா?