திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதிகள் அனுமதி! எப்போது விளக்கேற்றப்படும்?
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உறுதி செய்துள்ள நிலையில் இந்த தீபம் எப்போது ஏற்றலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு, தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்தன. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு டிசம்பர் 18-ஆம் தேதி விசாரணையை முடித்து, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை தர்காவில் நாளை (ஜனவரி 7) சந்தனக்கூடு உருஸ் திருவிழா நடைபெறுகிறது. தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஜனவரி 2 அன்று, திருவிழாவில் ஆடு, கோழி பலியிடத் தடை விதித்து, 50 பேர் மட்டுமே பங்கேற்க நிபந்தனையும் விதித்திருந்தார்.
இந்த 50 பேர் கட்டுப்பாட்டை எதிர்த்து, தர்கா வழக்கறிஞர் பிரபு ராஜதுரை நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் அவசரமாக முறையிட்டார். "சந்தனக்கூடு விழாவில் அதிகம் பேர் பங்கேற்பது வழக்கம்; 50 பேர் கட்டுப்பாடு ஏற்புடையதல்ல. விளக்க வாய்ப்பளிக்க தனி நீதிபதி மறுத்துவிட்டார்" என்றார் வழக்கறிஞர்.
அவசர விசாரணை கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. "ஆடு, கோழி பலியிடும் விவகாரத்தில் ஏற்கனவே மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. தர்கா கோரும் நிவாரணம் தீபத்தூண் வழக்கிலும் விவாதிக்கப்பட்டுள்ளது" என அவர்கள் குறிப்பிட்டனர்.
இன்று (ஜனவரி 6) தீபத்தூண் வழக்கில் இந்த அமர்வு உத்தரவிடும். அதன் முடிவைப் பொறுத்து, தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர். சந்தனக்கூடு உருஸ் திருவிழா இன்றிரவு 10:30 மணி முதல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று (ஜனவரி 6, 2026) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பை நீதிபதிகள் ஜெயசந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அளித்தனர். அப்போது தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு செயல்பட கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.
மலையில் உள்ள தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. எனவே வரும் கார்த்திகை மாதம் தீபத் தூணில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற வேண்டும். தீபமேற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. ஆனால் யாரை அனுமதிக்கலாம் என காவல்துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் ஆகியோர் முடிவு செய்து கொள்ளலாம். தர்காவுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றிக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த ஆண்டு கார்த்திகை தீபம் நவம்பர் 24 ஆம் தேதி வருகிறது. எனவே முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்றலாம்.












Click it and Unblock the Notifications