அஜித்குமார் மீது புகார் சொன்ன நிகிதா எங்கே.. மதுரையில் பூட்டி கிடக்கும் வீடு.. வெளியான தகவல்கள்
மதுரை: அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா மீது பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அடுத்தாக நிகிதா டாக்டர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவம் படித்தவர் அல்ல என்றும் பி.எச்டி. முடித்தவர் என்றும் கூறுகிறார்கள். அவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தாராம். திருமங்கலத்தில் அவரது வீடு தற்போது பூட்டிக்கிடக்கிறது. நிகிதாவும், தாயாரும் எங்கு சென்றார்கள்? என்பது குறித்து தெரியவில்லை என அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபெருமாள்.இவரது மனைவி சிவகாமி அம்மாள். இந்த தம்பதியின் மகள் தான் நிகிதா . இவர்கள் தங்களுக்கு முக்கிய பிரமுகரின் உதவியாளரை தெரியும் என்றும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2010-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி சிலரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
2010-ம் ஆண்டு இவர்களின் பேச்சை நம்பி சிலர், அரசு வேலை ஆசையில் ரூ.16 லட்சம் வரை இவர்களிடம் கொடுத்ததாகவும், ஆனால், வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டியாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் அப்போது திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2010ம் ஆண்டில் சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
நகை திருட்டு புகார்
இதேபோல் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தர்களையும் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா மீது வழக்கு பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக புகாரில் சிக்கியவர்கள் தான், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் நகை திருட்டுபோனதாக காவலாளி அஜித்குமார் மீது புகார் கூறியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
வீடு பூட்டிக்கிடக்கிறது
இதனிடையே நிகிதா டாக்டர் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் மருத்துவம் படித்தவர் அல்ல என்றும் அவர் பி.எச்டி. முடித்த முனைவர் என்று கூறுகிறார்கள். நிகிதா திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தாராம். மதுரை திருமங்கலத்தில் அவரது வீடு தற்போது பூட்டிக்கிடக்கிறது என்றும் நிகிதாவும், தாயாரும் எங்கு சென்றார்கள் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள்.
பேரம் பேசினார்
மேலும் நிகிதா குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த பேட்டியும் வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவர் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் சக்கர நாற்காலியை எடுத்து வந்து, கோவில் வளாகம் முழுவதும் சிவகாமி அம்மாளை அழைத்துச்செல்ல தனக்கு ரூ.500 தர வேண்டும் என அஜித்குமார் கேட்டாராம். அதற்கு நிகிதா ரூ.100 தருவதாக கூறினாராம். பின்னர் பேரம் பேசியதில் ரூ.200 தருவேன் எனக்கூறினாராம். ஆனால், ரூ.500 தர வேண்டும் என அஜித்குமார் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
ஐஏஎஸ் அதிகாரி
அதனாலேயே நகை திருட்டு என அஜித்குமார் மீது போலீசில் நிகிதா கூறியதுடன், தனக்கு தெரிந்த சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு நகை திருட்டு போனதாக தெரிவித்த தகவலால் போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அதனால் மானாமதுரையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் அஜித்குமாரை நகையை கேட்டு அடித்துக்கொன்றார்கள் " என்று அந்த வக்கீல் பேட்டியில் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications