ஆஸ்திரேலியா அருகே உள்ளது நித்தியானந்தாவின் கைலாசா! மதுரை அமர்வு நீதிமன்றத்தில் சீடர் பதில்
மதுரை: நித்தியானந்தா எங்கு உள்ளார், கைலாசா எங்கு உள்ளது, அந்த நாட்டிற்கு எப்படி செல்வது, ஏதேனும் பாஸ்போர்ட், விசா உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழையக் கூடாது என்பதை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு நித்தியானந்தா சீடர் பதில் அளித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியா அருகில் உள்ள யூஎஸ்கே (USK) எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருக்கிறார்.

நித்யானந்தா தங்கியிருக்கும் நாடு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது என்றும் அந்த சீடர் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.
நித்தியானந்தாவின் நியமனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஆதீன மடத்தின் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க அருணகிரிநாதருக்கு உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கவும், ஆதீன மட நிர்வாகத்தை கவனிக்க அருணகிரிநாதருக்கு தடை விதிக்கவும் கோரி இரு துணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கக் கோரிய மனு 2013 பிப். 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. ஒருவரை மடாதிபதியாக நியமனம் செய்ய சில தகுதிகள் உள்ளன. அவை எதையும் நித்தியானந்தா பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் ஆதீன மடத்தின் 293 ஆவது ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வந்ததால் நித்யானந்தா நீக்கப்பட்டதாக அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் நித்தியானந்தாவுக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அதையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கான அத்தாட்சி உள்ளது. இந்த அடிப்படையில்தான் மடத்திற்குள் நித்தியானந்தா நுழைவதற்கு கீழமை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் 293 ஆவது ஆதீனமாக பணிபுரிய தனக்கு முழு தகுதிகளும் இருப்பதாக நித்தியானந்தா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என கூறி நித்தியானந்தாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார். அந்த மனுவின் மீது அவ்வப்போது விசாரணை நடத்தப்படுகிறது. அப்போதுதான் நீதிபதிகள், நித்தியானந்தா எங்கு உள்ளார், கைலாசா எங்கு உள்ளது, அந்த நாட்டிற்கு எப்படி செல்வது, ஏதேனும் பாஸ்போர்ட், விசா உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வழக்கறிஞரை மாற்றக் கோரி மனுவை நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications