மண் மணக்கும் மதுரை! பூட்டியே கிடக்கும் மேயர் பங்களா! இந்த முறையாவது சென்டிமென்ட் உடைபடுமா?
மதுரை: மண் மணக்கும் மதுரை மாநகரை எந்தக் கட்சி ஆளப்போகிறது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவந்துவிடும்.
தூங்கா நகரம், தமிழ் கலாச்சார தலைநகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம் என பல சிறப்புகளை கொண்ட மதுரையில், திமுக இதுவரை அதிக முறை வெற்றிபெற்றிருக்கிறது.
கடந்த 1971-ம் திமுகவை சேர்ந்த மதுரை முத்துவில் தொடங்கி 2016-ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா வரை பலர் மதுரை மாநகரில் கோலோச்சியுள்ளார்கள்.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுவதற்கு முன்பு நகர்மன்ற தலைவராக இருந்தவர் மதுரை முத்து. இவரது நினைவாக மதுரையில் உள்ள ஒரு பாலத்துக்கு முத்து பாலம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற மதுரை மாநகராட்சித் தேர்தலில் திமுகவை சேர்ந்த குழந்தைவேலு மேயராக வெற்றிபெற்றார். அவரைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு அதே திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் மதுரை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மக்கள் மத்தியில் கட்சிக்கு அப்பாற்பட்டு தனிபெரும் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார் இவர்.

பெண் மேயர்
அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி எஸ்.சி.கோட்டாவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான கோபிநாதனின் மனைவி தேன்மொழி மதுரை மேயராக தேர்வானார். அவர் மு.க.அழகிரி மனைவி வழியில் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-2011 வரையிலான 5 ஆண்டுகாலமும் திமுக சார்பில் துணை மேயராக இருந்த பி.எம்.மன்னன் தான் நிழல் மேயராகவே மாநகராட்சியில் வலம் வந்தார்.

ராஜன் செல்லப்பா
தொடர்ந்து மதுரை மாநகராட்சியை திமுகவே ஆண்டு வந்து நிலையில் திடீர் திருப்பமாக 2011-ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா அமோக வெற்றிபெற்று மதுரை மேயரானார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சாதாரண அடிமட்டத் தொண்டரான பாக்கியநாதன் என்பவர் மேயர் வேட்பாளராக அந்த தேர்தலில் நிறுத்தப்பட்டார். 2011 வரை மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று பரந்து விரிந்து 100 வார்டுகளாக மாறியுள்ளன.

பெண்கள் பிரிவு
மதுரை மாநகராட்சி பொதுப்பிரிவின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது பெண் மேயராக யார் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மதுரை மக்களிடையே எழுந்திருக்கிறது. இதனிடையே 2001-ம் ஆண்டுக்கு பிறகு மதுரை மேயராக இருந்த யாரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் குடியேறவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திமுகவை சேர்ந்த குழந்தைவேலு மேயராக இருந்தபோது தனது குடும்பத்தினருடன் அந்த பங்களாவில் வசித்தார்.

மேயர் பங்களா
இவருக்கு அடுத்தப்படியாக மதுரை மேயரான ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், ராஜன் செல்லப்பா என யாரும் அந்த வீட்டுக்கு குடிபோகவில்லை. ராஜன் செல்லப்பா கட்சியினரை சந்திக்கவும், முக்கிய ஆலோசனைகள் நடத்தவும் மட்டும் அந்த இல்லத்தை பயன்படுத்தினார். மதுரை அண்ணா நகரில் அந்த இல்லம் இன்னமும் மாநகராட்சி செலவில் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மதுரையின் புதிய மேயராவது இந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்து மேயர் பங்களாவில் குடியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications