ஸ்டெர்லைட் தீர்ப்பு: நீதி கிடைத்தது.. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.. வைகோ மகிழ்ச்சி பேட்டி!
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செய்த நீதி போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வைகோ பேட்டி
இதுகுறித்து வைகோ அளித்துள்ள பேட்டியில், நீதிமன்றம் என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் உண்மைகளை மறைத்தது. பல உண்மைகளை மறைத்துதான் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வாதம் செய்தது. ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக தமிழக அதிமுக அரசு செயல்பட்டது.
13 பேரின் உயிர்
இந்த போராட்டம் காரணமாக 13 பேரின் உயிர் பறிபோனது. தமிழக அரசு பூனைக்கு தோழன், பாலுக்கும் காவல் என்று செயல்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்பட்டது. ஆனால் இப்போது தீர்ப்பு சாதகமாக வந்து இருப்பது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
பசுமை தீர்ப்பாயம்
முதலில் என்னுடைய மனுவை ஏற்க கூட தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் யோசித்தார்கள். நான் அரசியல் செய்வேன் என்று கருதினார்கள். ஆனாலும் நான் விடாமல் மனு அளித்தேன். பசுமை தீர்ப்பாயத்தில் 1.30 மணி நேரம் நான் பேசினேன். ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மிக கடுமையான வாதங்களை வைத்தேன்.
தருண் அகர்வால் குழு
தருண் அகர்வால் குழுவில் இதை குறித்து நான் ஆதாரங்களை அடுக்கினேன். இது தருண் அகர்வால் குழுவின் அறிக்கையிலும் இருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஒரே ஒரு புகை போக்கிதான் இருந்தது, 4 புகை போக்கிகள் இல்லை. புதிய புகை போக்கிகள் வைக்க 1 வருடம் ஆகும், இதை வாதத்தில் சொல்லி குற்றச்சாட்டுகளை அடுக்கினேன். ஆனாலும் பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு எதிராக வந்தது.
உச்ச நீதிமன்றம் சென்றேன்
உடனே உச்ச நீதிமன்றம் சென்றேன். தமிழக அரசும் வழக்கு தொடுத்து. என்னை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன், நீங்கள் யார் என்றார்? நான் வைகோ என்றேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் இங்கே என்று கேட்டார். நான்தான் இதில் மனுதாரர், எனக்காக நானே வாதாட போகிறேன் என்றேன். அதன்பின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கடுமையாக வாதிட்டேன்
அதன்பின் உச்ச நீதிமன்றத்திலும் இரண்டு நாட்கள் வாதிட்டேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிக மிக கடுமையான வாதங்களை, ஆதாரங்களை முன் வைத்தேன். அதன் பலனாக தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இது பெரிய சந்தோசம் அளிக்கிறது, என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.