“அறிவுள்ளவர்கள் யாராவது மும்மொழிக் கொள்கையை ஏற்பார்களா?”.. லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் பிடிஆர்!
மதுரை: "அறிவுள்ளவர்கள் யாராவது மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்களா? முழுமையாக தோல்வியடைந்த மாடலை கொண்டு வந்து, வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்னங்க அர்த்தம்?" என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் பி எம் ஸ்ரீ திட்ட நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் கண்டனங்களைச் சந்தித்த நிலையில், நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மும்மொழிக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்வதாக கடந்த ஆண்டு கடிதம் எழுதியதாகவும், அதன் பின்னர் சூப்பர் முதல்வர் பேச்சைக் கேட்டு, கையெழுத்திட மறுத்ததாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதுடன், அப்போதைய தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா எழுதிய கடிதத்தையும் வெளியிட்டார்.
ஆனால், அந்த கடிதத்தில் தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து மாநில கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்திருப்பதாகவும், அந்த கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பிடிஆர் பேட்டி
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
அறிவுள்ளவர்கள் யாராவது
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "தோல்வி அடைந்த மும்மொழி கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. முழுமையாக தோல்வியடைந்த மாடலை கொண்டு வந்து, வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்னங்க அர்த்தம்? அறிவுள்ளவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா?
சுயமரியாதை எல்லாம் இரண்டாவது. அறிவு இருப்பவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா? மும்மொழிக் கொள்கை முதன் முதலில் 1968 ஆம் ஆண்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை மும்மொழிக் கொள்கை என்று சொல்லி வருகிறார்கள். 57 வருடங்கள் ஆகியும் மும்மொழிக் கொள்கையை எங்குமே முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.
3வது மொழியே தேவைப்படாது
யாரெல்லாம் தமிழ்நாட்டைப் போல இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறார்களோ அங்கு, தேசிய சராசரியை விட சிறப்பான நிலையை அடைந்துள்ளது. நமக்குத் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்றார் அண்ணா. உத்தர பிரதேசத்திலோ, பீகாரிலோ, மத்திய பிரதேசத்திலோ இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி இருந்திருந்தாலே நமக்கு 3வது மொழியே தேவைப்படாது. இரண்டாவது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. இரண்டாவது மொழியையே சிறப்பாக கற்றுத்தர முடியாதவர்கள், 3வது மொழியை படிக்கச் சொன்னால் அதனை ஏற்க முடியுமா? எல்.கே.ஜி படிப்பவர்கள் முனைவர் பட்டம் படிப்பவர்களிடம் வந்து இப்படிப் படியுங்கள் எனச் சொல்வது போல இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "அறிவியலோ, சாதனையோ இல்லாத, அரசியல் மட்டுமே செய்பவர்கள்... கொள்கைகள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் செயல்படுபவர்களிடம்.. குழந்தைகளின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள். காலத்தின் கொடுமை" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications